புதன், 5 அக்டோபர், 2016

இருக்கற இடம் தெரியாம இருந்துட்டுப்போயிடனும்

இருக்கற இடம் தெரியாம இருந்துட்டுப்போயிடனும் 

நேற்று மாலை வேலை முடித்து மேட்டுப்பாளையம் சாலை வந்து நான்காம் எண் தனியார் பேருந்தில் ஏறி உக்கடம் வந்து கொண்டிருந்தேன்.ஒரு கையில் லேப்டாப் பை இன்னொரு கையை மேலே பிடித்து நின்றுகொண்டு வந்தேன். வழக்கமாகவே மாலையில் கூட்டமாக இருக்கும். இன்றும் அப்படித்தான். நான் சன்னல் வழியாக வேடிக்கை பார்த்தபடியே வந்துகொண்டிருக்கிறேன் ஏதோ நெருடலாக உணர என் சட்டைப்பையிலிருந்து ஒருவன் என் செல்போனை எடுக்கிறான். பார்த்துவிட்டேன். சுள்ளென்று கோபம் வந்துவிட்டது. பளாரென அறைந்துவிட்டேன்.கன்னாபின்னாவென நாலுவார்த்தை திட்டியும் விட்டேன் ( கெட்ட வார்த்தையெல்லாம் பேச மாட்டேன். கேட்ட வார்த்தைதான் :-) ).

அமைதியாகவே திருதிரு என முழித்தான். பேருந்தில் எல்லோரும் வேடிக்கைதான் பார்த்தார்கள். அவனோ ஐந்து நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு ஏண்ணா அடிச்சீங்க, கை தெரியாம பட்டுடுச்சு, நானெல்லாம் உழைச்சு சம்பாதிக்கறவன் அப்படி இப்படி என பேசிக்கொண்டே இருந்தான். நான் நடத்துனரிடம் போலீஸ் ஸ்டேசனில் வண்டியை நிறுத்துங்க என்று சொன்னேன். அவரோ சண்டை போடறுதுனா இறங்கி சண்டை போடுங்க, இப்ப டிக்கட் வாங்குங்க என்று கடமையில் சற்றும் சறுக்காதவராக காரியத்தில் கண்ணாயிருந்தார். ஒரே ஒருவர் மட்டும் அவனை  மிரட்டினார். அவனை நானும் மிரட்டிக்கொண்டே இருக்கும் போதே இன்னொருவன் அவனை கையைப் பிடித்து இழுத்து இறங்குடா நீ என்ன வேலை பண்ணிட்டு இருக்க என்று மிரட்டுவதாக பாவனை செய்து இறக்கிவிட்டான். இறங்கி இரண்டு பேரும் வேகமாக நடந்து போய்விட்டார்கள். ( கூட்டுக் களவாணிகள் ).

இப்போதுதான் சுற்றிலும் பார்க்கிறேன். பாதிப்பேர் விறுவிறுப்பான சண்டைக்காட்சியை அவ்வளவு அழகாக ரசித்தபடி வேடிக்கை பார்க்கிறார்கள். இடது பக்க இருக்கையில் இரண்டு பாலிடெக்னிக் மாணவர்கள் கேண்டி க்ரஷ் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். முன்னிருக்கை மாணவிகள் செல்போனில் கதைத்தபடியிருக்க, வலது பக்கத்து மாணவர்களும் செல்போனைத் தேய்த்தபடியிருக்க யாவும் சுபமாக நடந்துகொண்டிருக்கிறது.

அந்த ஒரே ஒருத்தர் குரல் கொடுத்தார் அல்லவா, அவர்தான் இன்னும் புலம்பியபடியே வந்தார். "என்னங்க யாருமே எதிர்த்து ஒரு கேள்வி கேட்க மாட்டேங்கறீங்க. ஒருத்தராவது சப்போர்ட் பண்ணி பேசினாதானே நாங்க அவன பிடிக்க முடியும். கண்டக்டரும் கண்டுக்கல, மத்தவங்களும் கண்டுக்கல. நானும் அவரும் மட்டும் தான் கத்திட்டு இருக்கோம். இப்படி இருந்தா எப்படி ??  என்னோட சொந்த ஊர் கேரளா. அங்க பப்ளிக்ல எவனாவது இப்படி நடந்திருந்தா எல்லோரும் பிரிச்சு மேஞ்சிருப்பாங்க தெரியுமா.? " என்று அங்கலாய்த்தார்

என்ன சேட்டா இப்படிக் கேட்டுட்டீங்க, நாங்க சங்கர அரிவாளால வெட்டுறப்பவே ஒரு கல்லெடுத்து வீச துப்பில்லாம லைவ் கொலைய பாத்ததே இல்லை னு பாத்துட்டு இருந்தோம், ஸ்வாதிய வெட்டினப்பவும் அப்படித்தான் இருந்தோம். இதுக்கெல்லாம் அசருவோமா என நினைத்தபடியே வந்தேன்.

ஒரு தோழர், "பிரதர் , நம்மாளுங்கெல்லாம் சினிமால எவனாவது ஹீரோ மாதிரி தப்ப தட்டிக்கேட்டா கை தட்டுவோம். நிஜத்துல அப்பா படத்துல வர்ற மாதிரி நாமெல்லாம் இருக்கற இடம் தெரியாம கமுக்கமா இருந்துட்டு போயிடனும்.” என்று சொல்லிவிட்டுச் சென்றார் பேருந்து விட்டு இறங்கியதும்.

சில மாதங்களுக்கு முன்னர் இதே வழித்தடத்தில், இதே மாதிரி நெரிசலான சமயம். பேருந்தில் வந்து கொண்டிருக்கிறேன். பெண்கள் கூட்டம் அதிகம். ஒரு பெண், திடீரென கத்தினார். நான் பார்க்கும் போது அவனது கை, அந்தப்பெண்ணின் இடுப்பில் இருந்தது. செருப்பால அடிப்பண்டா நாயே , நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கலயா என்ற அந்தப்பெண்ணின் குரல் வேறு என்னை உசுப்பி விட்டது. நானும் அதே டயலாக்கை பேசிக்கொண்டே, ஓங்கி அவனைக் குத்தினேன். நானெல்லம் புல்தடுக்கி பயில்வான். நான் குத்தி வலித்திருக்குமோ என்னவோ ஆனால் எனக்கு இன்னும் கட்டைவிரல் வலிக்கிறது. வேகமாக குத்தியதில் விரல் மடங்கிவிட்டது போலும். என்ன ஆச்சு என்று தெரியவில்லை. நான் குத்தியதும், அந்தப்பெண் கத்தியதும் பார்த்த ஒரு பெரியவர் அவனது சட்டையப் பிடித்தார். அரண்டு போனவன் வேகவேகமாக எல்லோரையும் இடித்துத் தள்ளிவிட்டு சிக்னலில் குதித்துவிட்டான்.

வழக்கம் போல இரண்டு பெரிசுகள் தான் " இடிக்கறதுக்குனே பஸ்சுல வர்றானுக கொள்ளைல போறவனுக " என்றார்கள். நான் அடுத்த சிக்னலில் குதித்துவிட்டேன். அவனைப்பிடித்து இன்னும் நாலு சாத்து சாத்த அல்ல. எனக்கு அந்த சிக்னலில் தான் இறங்க வேண்டும். இறங்கி வந்து விட்டேன். அந்தப்பெண்ணின் முகத்தை சரியாகப் பார்க்கவில்லை. கையில் வயர் கூடையுடன் இருந்தார். மில் வேலைக்கோ, கூலி வேலைக்கோ போய் வருபவராக இருக்கக் கூடும். இந்த மாதிரி எத்தனை எச்சைகளைக் கடந்து போய்வருவார் என்று மட்டும் நினைவுக்கு வந்தபடியே இருக்கும் கட்டைவிரல் வலிக்கும் ஒவ்வொரு தருணத்திலும்.

ஒரு பெரிய பெருமூச்சு ….. டாட்.


9 கருத்துகள்:

  1. அச்சம் தவிர்...இத இன்னும் யாரும் தெளிவா புரிஞ்சிக்கல

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. உண்மை தான். இயந்திரமயமாகிவிட்டோம். தொழில் நுட்பம் நமக்கு சிறகுகள் தந்தன ஆனால் நமது மனிதத்தை முடக்கிவிட்டது

      நீக்கு