செவ்வாய், 25 அக்டோபர், 2016

இளைஞர் எழுச்சி நாள் - அரசுப்பள்ளிகளில்

கிணத்துக்கடவு வட்டம் வடசித்தூரில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் தோழர் ஜீவாபாரதி.. அவர் நல்ல அரசுப்பள்ளி ஆசிரியர் மட்டுமல்ல, நல்ல வாசிப்பாளர், தொடர்ந்து எங்களது பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கு வருகை தருபவர். பல்வேறு ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்து வருபவர். அது மட்டுமல்லாமல் நல்ல சமூக செயல்பாட்டாளர். நிறைய உதவிகள் செய்து வருபவர். அதில் ஒன்று தான், கொலுசு நூலகத்தில் நடக்கும் அரசுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான இலவசப்பயிற்சி முகாமில் ஒவ்வொரு வாரமும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பெடுக்கிறார்.

இத்தனை சிறப்பு மிகு தோழர், கடந்த 15-10-2016 அன்று மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அய்யா அவர்களின் பிறந்த நாளை அரசு இளைஞர் எழுச்ச்சி நாளாகக் கொண்டாடுவதையொட்டி மாணவர்களிடம் உரையாற்ற முடியுமா என என்னை அழைத்தார். இதற்கு முன் இரண்டு மூன்று முறை அவர் அழைத்தும் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது ஆகவே இம்முறை வருவதாக ஒப்புக்கொண்டேன்.

ஒன்பதிலிருந்து, பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நிகழ்ச்சியாக இருந்தது. மாணவர்களுக்கு அறிவுரையாக அல்லாமல் ஒரு உரையாடலாக கலாம் அவர்களின் கனவு , நமக்குத் தேவையான சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, முதல் நிலைத் தயக்கத்தைத் தவிர்த்தல், ஆசிரியர்கள் பெற்றோர்களை மதித்தல் போன்ற நல்ல கருத்துகளை கதைகளின் மூலமாகத் தெரிவித்தேன். ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் வெகுவாகக் குறைந்து வரும் வாசிப்புப் பழக்கத்தை சுட்டிக்காட்டி வாசிப்பின் அவசியத்தை விளக்கினேன்.






ஆசிரியர்களும் மாணவர்களும் பேசி முடித்தவுடன் நன்றாகத்தான் பேசியதாக சான்றளித்தார்கள். விஸ்தாரமான மைதானம், நல்ல கட்டிடங்கள், சிறந்த ஆர்வமான ஆசிரியர்கள் என , தனியார் பள்ளிகளில் இல்லாத அம்சங்களைக் காண முடிந்தது. மன நிறைவான நிகழ்வாக இருந்தது.

முன்னதாக , ஆசிரியர் ஜீவபாரதி என்னை பத்துமணிக்கு மேல் வரச்சொல்லியிருந்தார், எல்லா இடத்துக்கும் தாமதமாகப் போகும் அபார சுறுசுறுப்பு கொண்ட நான் , அன்று வழி தெரியாது என்ற காரணத்தினாலும் , ஆர்வக்கோளாறினாலும் வெகு சீக்கிரமாகவே கிளம்பி 9 மணிக்கே அவர்களது பள்ளியை நெருங்கிவிட்டேன். என்னடா இவ்வளவு நேரமே போய் என்ன செய்யப்போகிறோம் என நினைத்து வண்டியை ஓரம் கட்டினேன்.

போகும் வழியில்  உள்ள ஒரு அரசு நடுநிலைப்பள்ளியில் தான் கவிஞர் பானுமதி அம்மா தலைமையாசிரியராகப் பணிபுரிகிறார். மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். இலக்கியவட்டத்துக்கு பல்வேறு சமயங்களில் உதவியிருப்பவர் மேலும் தவறாமல் கலந்து கொள்ளக்கூடியவர். அவர் கடந்த இரண்டு கூட்டங்களுக்கு வரவில்லை. சரி, பார்த்து நாட்களாகின்றனவே , போகும் வழிதானே என்று நினைத்து வண்டியை அவரது பள்ளிவாசலில் நிறுத்தி வந்துவிட்டாரா என்று கேட்க அலைபேசினேன்.

காலை 9.30மணிக்கு துவங்கும் பள்ளி என நினைத்து வந்திருப்பாரா என்ற சந்தேகத்தில் அழைத்தால், நான் ஒரு நாள் கூட தவறாது 8.30 மணிக்கே வந்து விடுவேன் என்று சொன்னவர், பள்ளிக்கு வெளியேவே வந்து முகம் மலர என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

நான் சும்மா அவரைப் பார்த்து நலம் விசாரிக்கவே வந்தேன் கிளம்புகிறேன் என்றேன். ஆனால் அவரோ விடுவதாயில்லை. வராதவர் வந்திருக்கிறீர்கள் எங்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்று சொன்னவர். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆசிரியர்களை அழைத்து அறிமுகப்படுத்தினார். மாணவர்கள் ஒரு அறையில் குழுமச் செய்து இளைஞர் எழுச்சி நாள் ஆகையால் எங்கள் மாணவர்களுடன் ஒரு சிறு உரையை நிகழ்த்தி நல்ல கருத்துகளைச் சொல்லிவிட்டு செல்லுங்கள் என்றார். மறுக்க முடியவில்லை. தயாரானேன்.

அந்தக் குழந்தைகளிடமும் சிறிது நேரம் பேசினேன். பின்னர் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் வென்ற குழந்தைகளுக்கு பரிசளிப்பு நிகழ்வு. மொத்தமே பள்ளியில் எண்பதுக்கும் குறைவான குழந்தைகள் தான் பயில்கிறார்கள் . சிலவருடங்கள் முன்பு கிட்டத்தட்ட 400 குழந்தைகள் படித்த பள்ளி என பானுமதி அம்மா சொல்லும் போது கொஞ்சம் மனது வருத்தப்பட்டது, குற்றவுணர்ச்சிக்கும் ஆளானது. ஆனால், இருக்கும் குழந்தைகள் அனைவரும் அவ்வளவு அறிவாகவும், துருதுருவெனவும் இயல்பான குழந்தைத்தன்மையுடனும் இருக்கிறார்கள். நன்றாகப் பேசுகிறார்கள் , படிக்கிறார்கள்..

ஓரளவு இடவசதியும் கட்டமைப்பும் உள்ள பள்ளிதான் . இடவசதிதான் இருக்கிறது. தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் நவீன கல்வியெல்லாம் இம்மாதிரி அரசுப்பள்ளிக்கு வந்து சேர இன்னும் சில தலைமுறைகள் தாண்ட வேண்டியிருக்கும். கோவை பூசாகோ கல்லூரி மாணவர்கள் தன்னார்வலராக இந்தப்பள்ளிக்கு வந்து சில வசதிகளைச் செய்து தந்திருக்கிறார்கள். குழந்தைகள் நல்ல கல்வி கற்க கணிப்பொறி, மற்றும் ப்ரொஜெக்டரைத் தங்கள் சொந்தச் செலவில் வாங்கித் தந்திருக்கிறார்கள்.

மாணவர்கள் படு சுட்டியாக இருக்கிறார்கள். கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, பேச்சுப்போட்டி என அனைத்துப்போட்டிகளிலும் மிகு உற்சாகத்துடன் கலந்து கொள்கிறார்கள்.

தனியார் பள்ளிகளில் இப்படியான கலை இலக்கிய ஈடுபாடு மிக மிகக் குறைவாகவும் சுத்தமாகவே இல்லாமலும் இருப்பதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறேன்.  கவிதை, கட்டுரை, பேச்சு, இலக்கியம் ஏன் குழந்தைகளுக்கான உரையாடல்கள், கதைகள் எதுவுமே நான் சென்று பார்த்த தனியார் பள்ளிகளில் இல்லை. ஆனாலும் பல்வேறு காரணங்களுக்காக தனியார் பள்ளிகளுக்குத்தான் பிள்ளைகளை அனுப்புகிறோம்.

தனியார் பள்ளிகளின் கட்டமைப்பும், வசதிகளும், முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இப்போது தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் சில அரசுப்பள்ளிகளும், அரசுப்பள்ளி ஆசிரியர்களும் மிகத் திறமையாகவும் தன்னார்வத்துடனும் செயல்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் நாடகம், கவிதை, கதை, வாசிப்பு, பேச்சு , விளையாட்டு, பொம்மலாட்டம், இன்னும் பல வடிவங்களில் அறிவுசார் குழந்தைகள் நிகழ்வுகளை நண்பர்கள் பலர் சிரத்தையெடுத்து ஒருங்கிணைத்து வழங்குகிறார்கள். அரசுப்பள்ளி ஆசிரிய நண்பர்கள் பலர் மிகச் சிறப்பாக இவ்வேலைகளில் தங்களது சுய ஆர்வத்தின் அடிப்படையில் இயங்கிவருகிறார்கள்.

இன்னும் கொஞ்சநாளில் அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு அனைத்து விதத்திலும் போட்டியாக சவாலாக வந்து விட வேண்டும்.

அப்போது தான் கல்வி அனைவர்க்குமாகும், நேர்மையான ஏட்டுக் கல்வியுடன் , கலை, இலக்கிய மற்றும் செயல்முறைக் கல்வியும் கிடைக்கும்.

வந்துவிடும்



2 கருத்துகள்:

  1. நல்ல பதிவு....யாரே அறிவார் நல்லார் பிறக்கும் குடி....கலாம்கள் எங்கும் இருக்கலாம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தங்கள் பார்வைக்கும் கருத்திடலுக்கும்

      நீக்கு