செவ்வாய், 11 அக்டோபர், 2016

மதமா மனிதமா

கொலுசு மின்னிதழில் வெளிவரும் எனது கட்டுரைத் தொடரான தேநீர் இடைவேளையில் இந்த மாதம் வெளியான எனது கட்டுரை ..


தேநீர் இடைவேளை : 7

மதமா மனிதமா

அது ஒரு வெள்ளிக்கிழமை. காலை வழக்கம் போல வேக வேகமாக வண்டியை ஓட்டிவந்து கோவில்பாளையம் ஸ்டேன்டில் நிறுத்திவிட்டு அவசரமாக நடந்துவந்து வந்த அரசுப்பேருந்தில் ஏறிக்கொண்டேன்.
உக்கடம் சென்று அங்கிருந்து அலுவலகப் பேருந்தைப்பிடித்து கணபதியிலுள்ள அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். அப்போதே பேருந்து நிலையத்தில் கசமுசா கசமுசா என வழக்கத்துக்கும் மாறாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அவசரத்தில் காது கொடுக்கவில்லை. பேருந்திலும் ஒரே சலசலப்பு, நடத்துனரிடம் இரண்டொருவர் விசாரித்தபடியே இருந்தனர். ஏங்க பஸ்ஸெல்லாம் ஓடுதா, எதுவும் பிரச்சினையில்லையா என்று. எனக்குக் குழப்பமாக இருந்தது. இரவு நேரமே தூங்கிவிட்டேன், காலையிலும் அவசர அவசரமாகக் கிளம்பி வந்து விட்டேன் எனவே செய்தி பார்க்கவில்லை. பக்கத்திலிருந்த நண்பரிடம் கேட்டபோது தான் விவரம் சொன்னார். யாரோ இந்து முன்னணி நிர்வாகியை கோவையில் கொன்ருவிட்டார்களாம் என்று.

அப்போதுதான், செல்பேசியில் இணையத்தை உயிர்ப்பித்து செய்தியைப்பார்த்தேன். இந்து முன்னணி இயக்கத்தின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் கோவை சுப்ரமணியம்பாளையத்தில் யாரோ அடையாளம் தெரியாத சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். . பேருந்துகள் பொள்ளாச்சி வழித்தடத்தில் மிகக் குறைவாகவே ஓடுவதை பேருந்தில் போகப் போகத்தான் புரிந்து கொண்டேன். வழக்கமாக உக்கடத்திலிருந்து அலுவலகப்பேருந்து இருக்கும். வழக்கத்துக்கு மாறாக அந்தப்பேருந்து வேறு வழியில் சுற்றி அரை மணிநேரம் தாமதமாக அலுவலகம் வந்து சேர்ந்தோம். நாள் முழுவதும் இதே செய்தி தான், இதே பேச்சு தான். அங்கு கலவரம் இங்கு கலவரம் என.

கொஞ்ச நேரத்தில், பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன, காரணம் அங்கங்கு பேருந்து மேல் கல் எடுத்து எறிகிறார்கள். அப்பா அழைத்து சீக்கிரம் வந்துவிடச் சொன்னார், இலக்கியவட்டச் சகோதரி சத்யபாமா அழைத்து சுந்தராபுரத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்துவிட்டார்கள் இனி பேருந்து ஓடாது, பார்த்து சீக்கிரம் வந்து விடுங்கள் அண்ணா என்றார். கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது எப்படி வீட்டுக்குப் போகப்போகிறோம் என.

மாலை அலுவலக நண்பருடன் பைக்கில் கிளம்பினேன். மலுமிச்சம்பட்டி வரை அவர் வருவார். அங்கு மச்சானை பைக் எடுத்து வரச்சொல்லி அவருடன் வீடு வந்து சேர்ந்தேன். வரும் வழியில் தான் பார்த்தேன். கடைகள், பேருந்துகள் ஏன் அதிக மக்கள் நடமாட்டம் கூட இல்லாமல் நகரம் வெறிச்சோடிக் கிடந்தது. அங்கங்கு சாலையோரங்களில் காவலர்கள் பாதுகாப்பில் இருந்தனர்.

சசிக்குமார் உடல் இறுதியாத்திரை தான் இன்னும் கொடுமையானது. அரசுப்பொதுமருத்துவமனையிலிருந்து கிட்டத்தட்ட பத்துகிலோமீட்டர் இறுதியாத்திரை. எனக்குத் தெரிந்து எவ்வளவு பெரிய ஆளுக்கும் இவ்வளவு தூரம் இறுதி யாத்திரைக்கு அனுமதி தந்ததாகத் தெரியவில்லை. அரசு மருத்துவமனையிலிருந்து ஊர்வலம் கிளம்பும் பகுதியில் இசுலாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி உள்ளது அங்கு இவர்கள் கூச்சலிட்டும் கல்லெடுத்து எறிந்தும் கலவரம் செய்துள்ளனர். வரும் வழியெங்கும் இசுலாமியர்களின் கடைகளில் கல்லெடுத்து எறிவது, பூட்டிய கடைகளை அடித்து நொறுக்குவதுமாக கோர விளையாட்டு விளையாடியுள்ளனர்,

துடியலூரில் ஒரு செல்போன் கடையில் புகுந்து செல்போன்களை சூறையாடிச் சென்றுள்ளனர் ஒரு போலிஸ் வாகனத்தையே தீக்கிரையாக்கியுள்ளனர் . இதையெல்லாம் காட்சிப்பதிவுகளாகவும், காணொலிப் பதிவுகளாகவும் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். நன்றாக கவனித்திருந்தால் ஒன்று புலப்படும். இப்படியான செயல்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 22 வயது முதல் 28 வயதுவரையான இளைஞர்கள். இதுதான் பெரிய அதிர்ச்சி.

இவர்களெல்லாம் பெரும்பாலும் வேலையில்லாதவர்களாகவோ அல்லது கிடைத்த வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் நிரந்தர வேலையற்றவர்களாகவோ இருப்பார்கள்/ இவர்கள் ஏன் இப்படி ஆனார்கள் ? இதற்கு பின்னால், அரசியல் ஆதாயம் தேடும் ஒரு சுய நலக் கூட்டம் இருக்கும். அவர்களின் தொடர் மூளை சலவையால் தான் இவர்களது மனதில் இப்படியான வன்மம் விஷமாக ஏறியிருக்கிறது.

1998ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புக் கலவரத்தில் அதுநாள் வரைக்கும் கட்டமைக்கப்பட்டிருந்த கோவையின் சாந்த சொரூப முகம் அகோரமானது. அந்த முகத்தின் கோரம் தணியவே சில ஆண்டுகள் ஆயின. அப்போதைய கலவரத்தைத் தொடர்ந்த நாட்களில் கோவையில் ரியல் எஸ்டேட் தொழில் படுத்தது, நிறைய கோவைக் காரர்களுக்கு வேலை பறிபோனது, கோவை மாப்பிள்ளை என்றதும் பெண் தரக்கூட மறுத்தனர். பூகோள ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கோவைக்கு இருந்த பாதுகாப்பான அம்சங்களைக் கட்டுக்குலைத்தது அந்தக் குண்டுவெடிப்பு. அதற்குப்பிறகு இப்போது மீண்டும் அந்த நிலை வருமோ என அச்சநிலை ஏற்பட்டது.

கொலையாளர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், யாரின் சுய ஆதாயத்துக்காகவோ, யாருடைய மனவக்கிரத்துக்காகவோ கொலைகாரர்கள் இசுலாமியர்கள் தான் என ஆதாரமின்றி தகவல்களைப் பரப்பினார்கள். விளைவு, இந்தக்கலவரம்.

மதம், சாதி போன்ற வஸ்துக்கள் அந்தக்காலத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காக, ஏதோ ஒரு நம்பிக்கைகாக , பழக்கவழக்கங்கள் மற்றும் தொழில் போன்றவற்றின் அடிப்படையில் உருவாக்கியிருக்கக் கூடும். அப்போது அது அவர்களுக்குத் தேவையானதாகக் கூட இருந்திருக்கலாம். இன்றைய காலகட்டத்தில் அவை தேவைதானா என்ற கேள்வி எழுகின்றது.

மற்ற நாடுகள் அனைத்தும் பல்வேறு வகையில் விளையாட்டு, தொழில்நுட்பம், அறிவியல் என அனைத்திலும் அசுர வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்க, , ஆதியிலேயே அறிவியல், மருத்துவம், கல்வி என அனைத்திலும் உலகின் முன்னோடியாக இருந்தவர்கள் இப்போது எல்லாவிதத்திலும் தாழ்ந்து போயிருக்கக் காரணம் அரசியலும் , அதற்காகவே வசதியாக இருக்கும் மத, இன, சாதிப் பிரிவினைகளும் தான். பல நாட்டவர்கள் நம்மை அடிமையாக்கி ஆளவும் இவை தான் காரணமாக இருந்தன என்பது வரலாறு.

எத்தனையோ தலைவர்கள் தோன்றி, இவற்றை எதிர்த்து குரல் கொடுத்த போதிலும் அவர்களால் முழுமையாக மாற்ற முடியவில்லை. காரணம், பகுத்தறிவாளர் ஒரே ஒருவர் தலைவராக வந்தால், எதிரில் பத்துத் தலைவர்கள் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களை மழுங்கடித்துவிடுகிறார்கள்.

இன்னும் கிராமப்புறத்தில் நாம் பார்க்கலாம். நான் அனுபவித்திருக்கிறேன். வேறு வேறு சாதியினர் ஏன் மதத்தினர் கூட மாமா மச்சான் உறவு முறை போல பழகுவார்கள் அவர்களுக்குள் என்றுமே சாதிச் சண்டை வந்ததில்லை. ரம்ஜானுக்கு பிரியாணியும் பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கலும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதில் மட்டுமல்ல அவர்களது ஒற்றுமை. அதைத் தாண்டியும் நல்ல உறவு, நல்ல ஒற்றுமை இருந்துதான் வருகிறது.

நகரங்களிலும் மாநகரங்களிலும் மதக்கலவரங்கள அதிகமாகின்றன. விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் பெரும்பான்மை நிலை இது தான். இந்தக் கலவரநிலை அதிகமாகக் காரணங்களில் ஒன்று தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் தான். நன்மைக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் சாதனங்கள் அதனினும் அதிகமாக தீமைகளை விளைவித்தபடியிருக்கின்றன.

ஒரே ஒரு நொடியில் உலகம் முழுக்க வலம் வந்துவிடுகிறது ஒரு வதந்தி. அது வதந்தி தானா இல்லையா என்பதை உறுதி செய்யாமலே உணர்ச்சி வேகத்தில் ஊருக்கே தகவல்களை பரிமாறிவிடுகிறோம். அவர்களும் அந்த வதந்தியை உணர்ச்சி வேகத்தில் நம்பி செயல்களில் இறங்கி விடுகிறார்கள்.

அங்க பஸ்ஸ கொளுத்திட்டாங்களாமா, இங்க பதிலுக்கு ஒருத்தன கொன்னுட்டாங்களாமா, கொலைகாரன் யார்னு தெரிஞ்சுடுச்சாமா, ஒரு கூட்டமே கிளம்பி ஊர்வலம் போறாங்களாமா இப்படி பல வதந்திகளால் நிறைந்து கிடந்தது கோவை மாநகரம் அன்றைய நாளில். அலுவலகத்திலும், வீட்டிலும், இன்னும் பல இடங்களிலும் பதட்டத்துடனும் பீதியுடனும் எந்த நேரம் என்ன ஆகுமோ என்ற அச்சத்திலும் பெண்கள் , குழந்தைகள் உட்பட அனைவரும் உறைந்து போயிருந்தனர். காலையிலேயே இந்தப்பிரச்சினைகள் ஆரம்பித்ததால், பால்காரர்கள் வரவில்லை, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தண்ணீரில் பால்பொடி கலந்து கொடுத்து சமாளித்தார்கள். மளிகைக் கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டன. மக்கள் கிடைத்ததை உண்டு சமாளித்தார்கள்.

நல்லவேளையாக ஒரே நாளில் ஊர் சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டது. இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என நினைக்கவே பயமாக இருக்கிறது.

கல்வி, இளைஞர்களை அறிவார்ந்த செயல்களைத் தான் செய்யத் தூண்டும். இந்த இளைஞர்கள் கல்வி கற்றவர்களாக இருப்பின் வேதனை. அது நமது கல்வியமைப்பின் படுதோல்வி. ஆனாலும், இந்தப் பெரும் சோதனைக்கு ஒரே தீர்வு கல்வி தான். அதன் மூலம் தான் வரும் சந்ததியை இம்மாதிரியான வன்மமற்ற அறிவார்ந்த சமூகமாக மாற்ற முடியும். அப்படியான நேர்மையான கல்வியைத் தர , அரசால் தான் முடியும். தனிமனிதர்கள் தங்கள் மதத்தை அஸ்திவாரமாகக் கொண்டு கட்டி நடத்தும் கல்வி நிறுவனங்கள் ஆபத்தைத் தான் உற்பத்தி செய்யும்.

மக்களே நாம் மனிதர்கள். மதம் இனம் சாதி என எத்தனை பிரிவுகளால் நாம் பிரிந்து கிடந்தாலும் நமது அடிப்படை உணர்வு மனிதம். அதையும் தொலைத்து விட்டு நாம் ஏன் வாழவேண்டும்.... ?

கொலுசு மின்னிதழில் வாசிக்க ..

http://kolusu.in/kolusu/kolusu_oct_16/index.html#p=10


6 கருத்துகள்:

  1. உங்களுக்கு கவிதை போலவே, உரைநடையும் லாவகமாக கைகூடுகிறது. வாழ்த்துக்கள். உங்கள் கருத்துக்களில் முழுமையாக உடன்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த நன்றியும் அன்பும்

      நீக்கு
  2. Excellent and mindful. Yes மக்களே நாம் மனிதர்கள். மதம் இனம் சாதி என எத்தனை பிரிவுகளால் நாம் பிரிந்து கிடந்தாலும் நமது அடிப்படை உணர்வு மனிதம். அதையும் தொலைத்து விட்டு நாம் ஏன் வாழவேண்டும்.... ?

    பதிலளிநீக்கு