புதன், 30 செப்டம்பர், 2015

முகநூல் தமிழ்



கற்காலம் தொட்டு கணினிக் காலம் வரைக்கும் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்றாற்போல தன்னைப் புதுப்பித்துக் கொண்டு என்றும் மாறா இளமையுடன் இருக்கும் மொழி நம் தாய்த் தமிழ் தான். மற்ற மொழிகளுக்கெல்லாம் நூற்றாண்டு வரலாறு தான். நமது மொழிக்குத்தான் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வரலாறு. அதுவும் இன்னும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை; தோண்டத் தோண்ட பத்தாயிரம் ஆண்டுகளின் வரலாற்றை இந்த நிலமெங்கிலும் நிறைத்துப் புதைந்து கிடக்கிறது இன்னும். ஓலைச் சுவடிகளில் எழுதிய விரல்கள் இப்போது தொடு திரையிலும் தமிழிலியே எழுதுவது வியக்கவும், பெருமை கொள்ளவும் வைக்கிறது.

கணினியும் இணையமும் மிகப்பெரிய கடலெனப் பரவிக்கிடக்கிறது. இதில் தமிழின் பயன்பாடு பற்றியும் உள்ளீடுகளைப் பற்றியும் பேச விஸ்தாரமான அறிவு வேண்டும். நான் இங்கு சொல்ல விரும்புவது நாம் அன்றாடம் மூழ்கிக் கிடக்கும் முகநூலில் தமிழின் பயன்பாடுகள் பற்றி.

ஃபேஸ்புக் என்பது பெயர்ச்சொல் , மார்க் ஜூகர்பர்க் என்ற வெள்ளைக்காரன் கண்டுபிடித்தது அதை முகநூல் என்று தமிழ்ப்படுத்துவது தவறு என்ற ஐயத்திலேயே இருந்தேன். அப்படிப்பார்த்து நாம் தயங்கி இருந்தால், தொலைக்காட்சி, தொலைபேசி, அலைபேசி, மின்னஞ்சல் போன்ற வார்த்தைகளே நமக்குக் கிடைத்திருக்காது.

இதுபோன்ற அத்தியாவசியமான மற்றும் கலைச் சொற்களை நாம் உருவாக்கிக் கொள்ளத்தான் வேண்டும். தொழில்நுட்பம் வளர வளர ஒரு மொழி தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். மொழியை வளப்படுத்தவும் வாழவைக்கவும் இது ஒரு அடிப்படைத் தேவையாகவே இருக்கிறது.

முகநூல் தமிழ் :

முகநூலில் தமிழ் பயன்பாடு எவ்வாறு இருக்கிறது அதன் சாதக பாதகங்களைப் பார்க்கலாம்.

முகநூலில் எனக்கு மிகக் குறைந்த நண்பர்களே இருக்கிறார்கள் அவர்களில் தமிழில் தொடர்ந்து எழுதுபவர்களைப் பற்றியும் , தமிழ் மொழியை புதிய தொழில்நுட்பத்திலும் சிறப்பாகக் கையாளுபவர்களையும் பற்றி சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன்.

அதிகம் கவிதைகளின் பால் நேசம் கொண்டவனென்பதால் என் முகநூல் நண்பர்கள் அனைவரும் கவிஞர்களாகவே இருக்கிறார்கள். அதுவும் கவிதை மொழியின் உச்சத்தில் உலவுபவர்கள் என் நட்புவட்டத்தில் இருப்பது எனக்குக் கூடுதல் பெருமையானதாக இருக்கிறது. அவர்களில் கவிதைகளைத் தாண்டியும் மொழிக்கான தங்களது பங்களிப்புகளை பதிவுகளாகச் செய்யும் ஓரிருவரையும் அவரது பதிவையும் சொல்ல விழைகிறேன்.


கவிஞர் மகுடேஸ்வரன் :

முதலில் எனது நட்பு வட்டத்தில் இருக்கும் கவிஞர் மகுடேஸ்வரனைப் பற்றிப் பேச வேண்டும். இவர் திருப்பூர்க் காரர். திருப்பூர் மக்களின் பிரதானத் தொழிலான பின்னலாடைத் தொழில் நிறுவனத்தில் உயர்பதவியிலிருப்பவர்.
அதுவல்ல அவர் சிறப்பு. அவர் ஒரு அற்புதமான கவிஞர்.

பலமுறை எழுத்தாளர் சுஜாதா உட்பட பல ஆளுமைகளால் பாராட்டப்பட்ட பல கவிதைகளுக்குச் சொந்தக்காரர். அவரது முகநூல் தளத்துக்கு சென்று பாருங்கள். கவிதைகள், தனது அனுபவங்கள் தாண்டி முகநூலில் மிக முக்கியப் பணியை அவர் செய்து கொண்டிருக்கிறார். அது தமிழைக் கற்றுத்தருவது.

பல தமிழ் வார்த்தைகளைப் புரிய வைத்தல், காலம் காலமாக நாம் தப்பும் தவறுமாக எழுதி வரும் வழக்கைத் தவறென தெளிய வைத்தல், பல வேற்று மொழி வார்த்தைகளுக்கு சரியான தமிழ் கலைச் சொற்களை அறிமுகப்படுத்துதல் என முகநூலை, தமிழ் வளர்க்கும் கருவியாக அற்புதமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.


அவருடைய ஒரு பதிவு :

எந்தன் உந்தன் என்றெழுதக் கூடாது.
என்றன் உன்றன் என்றுதான் எழுதவேண்டும்.
என்+தன் = என்றன்
உன்+தன் = உன்றன்
பலரும் ‘எந்தன், உந்தன்’ என்றே எழுதுகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் திரைப்பாட்டு எழுதியவர்கள் இசையில் உட்கார வேண்டும் என்று கருதி ‘எந்தன், உந்தன்’ என்றெழுதிவிட்டார்கள். பேச்சு வழக்கில்கூட கொச்சையாக ‘எந்தன் உந்தன்’ என்பதில்லை நாம். வியப்பாக இருக்கிறதா ? பேச்சு வழக்கில் மக்கள் என்றன் உன்றனைப் பயன்படுத்துகிறார்களா ? ஆம். பயன்படுத்துகிறார்கள். கோவைத் தமிழை நினைவுகூட்டிப் பாருங்கள்.
என்ற பேச்சக் கேட்பியா மாட்டயா ?’
உன்ற அழும்புக்கு அளவேயில்ல போ’
என்ற பொழப்பு இப்படியாகிப் போச்சே...’
உன்ற காட்டுல நல்ல விளைச்சல்தான்...’
இதில் உள்ள என்ற உன்ற - என்றன் உன்றன் தான் ! மக்கள்கூட என்றன் உன்றன் என்னும்போது, எழுதுகிறவர்கள் அறியாமல் தவறாக எழுதுகிறார்கள்.
பேச்சுத் தமிழில் இவ்வாறு ஏராளமான அருஞ்சொற்களும் தூய வழக்குச் சொற்களும் நாமறியாதபடி கலந்திருக்கின்றன.


புல் பச்சையாக இருக்கிறது. எப்படிச் சொல்கிறோம் ? பசும்புல்.
கிளி பச்சையாக இருக்கிறது. எப்படிச் சொல்கிறோம் ? பசுங்கிளி.
நெற்கதிர் முற்றாமல் பச்சையாக இருந்தால் பசுங்கதிர்.
பச்சைப்புற்கள் மூடிய தரை பசுந்தரை.
உருக்கிக் கலக்காத தூய்மையான பத்தரை மாற்றுத் தங்கம் பசும்பொன்.
ஆனால், பசு தரும் பாலை எப்படிச் சொல்கிறோம் ? பசும்பால்.
இது தவறு. காய்ச்சப்படாத பச்சைப் பாலைத்தான் பசும்பால் என்று சொல்லவேண்டும். சற்றுமுன் கறந்த தூய்மையான பால் என்ற பொருளிலும் பசும்பால் என்று சொல்லலாம், பசும்பொன் என்பதைப்போல. ஆனால், பசும்பால் என்பது பசுவின் பால் என்ற பொருளைத் தராது.
பசுவிடம் கறந்த பால் என்பதைச் சொல்ல பசுப்பால் எனல் வேண்டும். பசுவின்கண் கறந்த பால் - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை !
ஆக, பசும்பால் வேறு ! பசுப்பால் வேறு !

இப்படியான நுணுக்கமான தமிழ் சொற்களையும் பிழைகளையும் சுட்டிக்காட்டி தெளிவுபடுத்துகிறார். இப்படியொரு தமிழ் ஆசான் நாம் கண்ணால் பார்க்காமலேயே , கட்டணம் இல்லாமலேயே கற்றுத் தருபவர் கிடைப்பாரா.?

தமிழில் அறிவியல் தகவல்களும், தமிழிலேயே தொழில்நுட்பங்களை எழுதுபவர்களும் மிகக் குறைவு. அதில் நான் பின் தொடரும் ஒரு பக்கம் அறிவுடோஸ் :


நாம் அழுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலான காரணங்கள் வெற்றி கிடைத்த மகிழ்ச்சி, வலி, பிறர் பிரிந்து செல்லுதல், வலுவிழந்த தன்மை போன்றவை தான். வேர்வை மற்றும் உமிழ்நீர் சுரப்பிகள் போல கண்ணீருக்கும் அழுகை சுரப்பிகள் என நமது கண்களில் உண்டு. உணர்ச்சியால் அழும்போதும், வலியால் அழும்போதும் இந்த சுரப்பிகள் ஒரே மாதிரிதான் செயல்படும்.

மற்ற சுரப்பிகள் போலவே இவையும் நமது இரத்த ஓட்டத்துடன் இணைந்துள்ளன. நமது கண்ணீரில் உள்ள ஒரு சில பொருட்கள் இரத்தத்திலிருந்து வருகின்றன. இந்த இரத்தத்தில் இருந்து பொருட்கள் கண்ணீரில் கலக்கும் விகிதம் சில ஹார்மோன்களினால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த ஹார்மோன்களின் செயல்பாடுதான் நாம் வலியினை உணரும் போதும், உணர்ச்சியில் அழும்போதும் என வெவ்வேறாக இருக்கிறது. எனவே நாம் அழும் நிலைகள் வெவ்வேறானது தான்.

30 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அமெரிக்க ஆராய்ச்சியாளர் உணர்ச்சிமிக்க அழுகை மற்றும் சாதாரண வெங்காயத்தினால் ஏற்படும் அழுகை என இரண்டு அழுகைகளிலும் கிடைத்த கண்ணீரை ஆராய்ந்தார். இதில் உணர்ச்சிமிக்க அழுகையில் கிடைத்த கண்ணீரில் புரதங்கள் அதிகம் என்பது கண்டறியப்பட்டது.

பாதகங்களையும் பார்த்துவிடலாம் :

எந்தத் தொழில் நுட்பமும் அது கண்டறியப்படும் நோக்கத்தைக் கடந்து தவறான நோக்கங்களுக்கும் பயனாகிப்போவது விதி. இதற்கு முகநூலும் விதிவிலக்கல்ல. மொழியை வளர்க்கப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைக்கும் முகநூல்தான் மொழியைச் சிதைக்கும் பணியையும் செய்துகொண்டிருக்கிறது. முகநூலை, நூல்பிடிப்பதற்கும், ஆள் பிடிப்பதற்கும் அரசியல் செய்வதற்கும் பயன்படுத்துவோரும் இருப்பதால் இது நடந்தே விடுகிறது.

மிகச் சிலரே தமிழில் பிழையின்றி எழுதுகிறார்கள். தப்பும் தவறுமாக தமிழில் எழுதுவது முகநூலில் அதிகம். அதைப் பார்க்கும் போதெல்லாம் சுட்டிக் காட்டுங்கள்.

என்ன தான் முகநூலில் தமிழில் எழுதினாலும் முகநூல் வெளிநாட்டுத் தயாரிப்பு என்பதால் அதன் அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் தொழில் நுட்பங்களும் தமிழில் இல்லை. எதிர்காலத்தில் வரும் என நம்பலாம்.

எந்தக் கருவியாயிருந்தாலும் அதை ஆக்கவோ, அழிக்கவோ பயன்படுத்துவது நம் கைகளில் தான் உள்ளது.

முகநூல் மட்டுமல்லாது இணையத்தை மொத்தமாக நமது அறிவு வளர்ச்சிக்கும், மொழி வளர்ச்சிக்கும் பயன்படுத்துவோமாக.

______________


இப்படைப்பு எனது சொந்தப்படைப்பு.“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” இது , இதற்கு முன் வெளியான படைப்பல்ல என்றும் முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன்.

போட்டி வகை : 1

4 கருத்துகள்:

  1. வணக்கம்... வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவிற்கு உங்களை வலைப்பதிவர் விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.வாழ்த்துகள் வெற்றி பெற..

    பதிலளிநீக்கு
  2. அருமையான கட்டூரை! வாழ்த்துக்கள்! நன்றி

    பதிலளிநீக்கு
  3. மகுடேஸ்வரன் அவர்களது கட்டுரையை புதிய தலைமுறை வாரயிதழில் படித்திருக்கிறேன். இன்று அவரின் முகநூலில் தமிழ் வளர்க்கும் பணி குறித்து அறிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு