சனி, 19 செப்டம்பர், 2015

கடவுள் இங்கிருக்கிறார்

நாளைய பொள்ளாச்சி இலக்கிய வட்ட நிகழ்வுக்காக
அரங்கத்தைத் தயார் செய்ய இன்று மாலை பள்ளிக்குச் சென்றிருந்தோம். பள்ளி காவலாளி வரத் தாமதமான சமயம் வாசலில் நின்று சாலையை வேடிக்கை பார்க்கலானேன். விநாயகர் சிலைகளை பெரிய பெரிய வண்டிகளில் ஊர்வலம் தூக்கிக் கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். வண்டிகளில் எல்லோரும் வாத்தியங்களை இசைத்தபடி ஆடிப்பாடிப் போய்க்கொண்டிருந்தார்கள் முன்னும் பின்னும் காவலர்கள் பாதுகாப்புடன்.
எதேச்சையாக பள்ளிக்கூட வாசலின் இடப்புறம் பார்க்கிறேன். மூன்று சிறுவர்கள். சாலையோரம் சிறு குடில் அமைத்து அங்கேயே தங்கி பொம்மைகள் விற்கும் நாடோடி மக்களின் பிள்ளைகள். அழகாக சிறு குடில் ஒன்றை அமைத்து, குட்டி விநாயகர் சிலையை வைத்து தீபம் போட்டு அவர்களால் ஆன சில பழங்கள் மிட்டாய்களை வைத்து வழிபட ஆயத்தமானார்கள்.
ஒருவன் அந்தச் சின்னஞ்சிறு குடிலின் வாசலைக் கூட்டி, நீர் தெளித்து வண்ணப் பொடிகளால் கோலமிட, மற்றவன் பள்ளிக்குள் ஓடிச் சென்று பூக்களைப் பறித்து வந்தான். மூன்றாமவன் பூஜைக்கான ஏற்பாடுகளில் இருந்தான். பார்க்கவே மனம் பரவசமாக இருந்தது. வரிசையாக ஊர்வலம் போகும் வண்டிக்காரர்களிடம் உரக்கச் சொல்ல வேண்டும் போல இருந்தது. 
" நீங்கள் தூக்கிப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கும் கடவுள் உண்மையில் இதோ இந்தச் சின்னஞ்சிறு குடிலில் மிக்க மகிழ்வுடன் இருக்கிறார் "  என்று.






நாளை நிகழ்வுக்கு வரும் நண்பர்கள் இவர்களை தரிசிக்கலாம். நான் இதோ அவர்களுக்கான தின்பண்டங்களை எடுத்து வைக்கத் துவங்கி விட்டேன்.

2 கருத்துகள்:

  1. எதிர்பார்ப்பற்ற இந்த அன்புச் சிறுவர்கள் குடிலுக்குள்ளாவது கடவுள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்:)

    பதிலளிநீக்கு
  2. குழந்தைகளுடன் விநாயகர் கொண்டாட்டமாய் இருக்கிறார்! அருமை!

    பதிலளிநீக்கு