திங்கள், 14 செப்டம்பர், 2015

ஒரு நாய் வாங்கி வளர்க்கலாமா ..?

வழக்கம் போல பாரதியின் திருவிளையாடல் தான் இது

நேற்று ஓவிய வகுப்புக்கு பாரதியை அழைத்துப் போய் விட்டுவிட்டு புன்னகை ஆலோசனைக் கூட்டத்துக்குப் போய்விட்டேன். வகுப்பு முடிந்து சற்று நேரமாகிவிட்டது அவளை அழைக்கப்போக. போனால் வகுப்பு முடிந்து ஓவியர் வீட்டு பொமரேனியன் நாய்க்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அழைத்துக் கொண்டு வண்டியில் வரும்போது கேட்டாள்
" அப்பா நாமும் நாய் வளர்க்கலாமா ?
“ வேண்டாம் டா. நம்மாள முடியாது "
“ ஏம் பா ?”
“ நமக்கு நேரமே இருக்காது டா "
“ எனக்கு நேரம் இருக்குப் பா. நான் பாத்துக்கறேன்"
“ இல்ல டா. , நான் வேலைக்கு போயிடறேன், அம்மாவும் வேலைக்குப் போயிடறாங்க. நீ ஸ்கூலுக்குப் போயிடற. நாய்க்கு சாப்பிடக் குடுக்கனும், குளிப்பாட்டனும். நல்லா பாத்துக்கனும்.நமக்கு நேரம் இருக்காது" என்றேன்
“ அப்பா , நான் பாத்துக்கறேன். நாய நான் ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போயிடறேன் " என்றாள்.

நான் இந்த உரையாடலை நிறுத்த அறிவாளியாய், நக்கலாகச் சொன்னேன்.
“ ம்க்கும் உனக்கே ஃபீஸ் ஏகப்பட்டது போகுது. நாயை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப்போனா அதுக்கு வேற ஃபீஸ் கட்டணும்" என்று சிரித்தேன்.

யோசிக்கவே இல்லை அவள். சட்டென பொளேரென சொன்னாளே " அப்பா, அப்படினா ஒரு ஐடியா, நாயை நீங்க ஆபீஸ் கூட்டிட்டு போயிடுங்க. நாய்க்கும் சம்பளம் தருவாங்க ல, நாய் வளர்த்துன மாதிரியும் ஆச்சு, சம்பாரிச்ச மாதிரியும் ஆச்சு " என்று.

என்ன ஒரு லாஜிக்கான கேள்வி. நாயை ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போனா ஃபீஸ் கட்டனும்னு சொல்லும்போது வேலைக்குக் கூட்டிட்டுப் போனா சம்பளம் தந்து தானே ஆகனும்..?

நான் வழக்கம் போல " பே.....” என ஆகிவிட்டேன்.

குழந்தைகள் நம்மை எளிதில் தோற்கடித்து விடுகிறார்கள். குழந்தைகளிடம் தோற்றுப்போகவே நாமும் விரும்புகிறோம். ஆனால் இப்போதைய குழந்தைகள் நிறையக் கேள்விகளை வைத்து இருப்பதைப்போலவே நமது எல்லாக் கேள்விகளுக்கும் சரியோ தவறோ ஒரு அழகான பதிலை வைத்திருக்கிறார்கள்.

1 கருத்து: