வெள்ளி, 14 நவம்பர், 2014

குழந்தைகள் தின வாழ்த்துகள் ... குழந்தைகள் அழகாக்குகிறார்கள் அசூயையான இந்த வாழ்க்கையை


பெரியவளானதும் மருத்துவராக வேண்டும் என்பதே மகளின் கனவாம். கரப்பான்பூச்சிக்கு பயந்து கத்திய நாளில் அம்மா கேட்டார்; இதற்கே பயந்தால் எப்படி மருத்துவராவது. பதினொன்னாம் வகுப்பிலேயே கரப்பான் பூச்சி, தவளையெல்லாம் அறுத்துப் பழக வேண்டும் என்று. அரண்டு போன மகள் எதற்கெனெக் கேட்டாள். மனிதர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான பயிற்சி. உதாரணத்துக்கு மனிதனின் வயிற்றில் கட்டி என்றால் வயிற்றைக் கிழித்து அறுவை சிகிச்சை செய்துவிட்டு மீண்டும் தைக்க வேண்டும் என்ற போது, என்ன தைக்க வேண்டுமா ஊசி, நூல் வைத்தா என்று சிரித்தபடியே கேட்டாள். ஆமாம் அதற்கென்று தனியா ஊசி நூல் இருக்கு என்றேன். அப்ப அதை வாங்கிக் குடுங்க. முதல்ல துணில தச்சு பழகறேன் என்று சிரித்தபடி ஓடினாள். வாங்கிக் கொடுத்தால் எதாவதொரு பொம்மைக்கு அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்து விடுவாள் வழக்கம்போல …


அவமானப்படுவதும் பல்பு வாங்குவதும் அப்படி ஒன்றும் புதிய காரியமோ அல்லது ஆச்சர்யமான நிகழ்வோ அல்ல நமக்கு (என்னைச் சொன்னேன் )..

அன்று ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை என்பதால் ஒன்பது மணிவரை தூங்கிவிட்டு எழுந்து பார்க்கும் போது படுக்கைக்கு அருகில் மடிக்கணினியில் மகள் விளையாடிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் கண்களை மூடிப் படுத்துவிட்டு மீண்டும் விழித்துப்பார்த்தால் விளையாடிக் கொண்டுதானிருந்தாள். “ பாப்பா, ரொம்ப நேரம் மடியில வச்சு விளையாடக் கூடாது, டெஸ்க்ல வச்சு விளையாடு என்றேன் " ஏம்பா" என்றாள் அப்பாவியாக, " லேப்டாப் ல ரொம்ப சூடு வரும் அது உடம்புக்கு நல்லது இல்லை " என்றேன். “ ஏம்பா, லேப்டாப்புனாலே லேப் ல வச்சு வேலை செய்றதுக்குத்தான..? அதுக்குத்தான இதை டிசைன் பண்ணி இருப்பாங்க?” என்று சொல்லிவிட்டு சிரித்தாள், சிரித்தாள், பெரிதாகச் சிரித்தாள். சமையலறையிலிருந்து இன்னொரு சிரிப்புச் சத்தமும் சேர்ந்து வந்தது துணைக்கு. விடுமுறை நாளை முன்னிட்டு இந்த பல்பு நமக்குத் தேவைதான் என்று நொந்தபடி திரும்பிப் படுத்துக் கொண்டான் பூபாலன்.


ஒருமுறை தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருந்தோம், உருக்கமான காட்சி. இந்த மாதிரிக் காட்சிகளுக்கெல்லாம் மனைவி எப்போதும் தாரை தாரையாக அழுது விடுவாள். அன்றும் அப்படித்தான் கன்னம் வரைக்கும் கண்ணீர் வடிய மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். நானும், மகளும் பார்த்து விட்டோம். நாங்கள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டோம் அவளைப் பார்த்து. மகள் சொன்னாள் " ஏம்மா, நடிப்பு தான மா, இதுக்குப் போய் இப்படி அழறிங்களே என்று" மனைவி " ஆமா, உனக்கும் உங்க அப்பாக்கும் தான் கல் மனசு எனக்கு மென்மையான மனசு " என்று சீண்டிவிட்டுப் போய்விட்டாள்.

யோசிக்கிறேன் மகள் கொஞ்சம் மெச்சூர்டு, ஆனால் வயதுக்கு மீறிய மெச்சூர்டா என்று. நான் இந்த வயதில் இது மாதிரிக் காட்சிக்கெல்லாம் நெகிழ்ந்து அழுது கொண்டுதான் இருந்தேன். இவளுக்கு நெகுழும், இரங்கும் குணம் இருக்காதோ என்று கூட அச்சமானது.

சில நாட்கள் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். செடிக்கு, நாய்க்கு, பிச்சைக்காரர்களுக்கு, பென்சில் கேட்ட சக தோழிக்கு, தின்பண்டம் பகிரக் கேட்ட தோழர்களுக்கு என எல்லார்க்கும் இரங்கித் தான் போகிறாள். மேலும் நாம் வேண்டுமென்றே யாரிடமாவது எரிந்து விழுந்தால், கேள்வி கேட்கிறாள். சமாதானமாகிக் கொண்டேன். கு.விநாயகமூர்த்தியின் ஒரு கவிதை வரிகளைப் போல என் வயதில் சிறுவர் கூட்டம் ஒரு திரைப்படத்தில் இறந்து போனவன் இன்னொரு திரைப்படத்தில் எப்படி உயிருடன் வந்தான் என்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தது, இப்போதைய குழந்தைகள் சிம்ரனுக்குக் குரல் கொடுப்பது சின்மயி என்பது வரைக்கும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

மாற்றங்கள் குழந்தைகளிலிருந்தே ஆரம்பிக்கின்றன..


பென்சில் சீவித் தர்றீங்களாப்பா ? என்று பாசமாகத்தான் கேட்டாள் இரவு 9 மணிக்கு. சரி என்று அமர்ந்தேன் சம்மணம் போட்டு. பவுச், டஸ்ட்பின், ஷார்ப்னர் எல்லாம் அவளே கொண்டு வந்து கொடுத்துவிட்டு கன்னத்தில் கைவைத்து அருகில் அமர்ந்து கொண்டாள்.

சீவுகிறேன் சீவுகிறேன் சீ....வி....க்... கொண்டே இருக்கிறேன். 24 கலர் பென்சில்கள், இரண்டு பென்சில்கள் சீவி சீவி கையே வீங்கிவிட்டது. ஒரு முறை சீவியிருந்தால் ஒன்றும் பெரிதாக இருந்திருக்காது, ஒவ்வொரு பென்சிலையும் இரண்டு மூன்று முறைகள்... ஏன்..? ஒருமுறை சீவியதும்.. “ அப்பா இன்னும் கொஞ்சம் ஷார்ப்பா என்பாள்.. இன்னும் கொஞ்சம் ஷார்ப் பண்ணும்போது உடைந்து விடும்... அவ்வ்வ்..... சாப்பிட்ட ரெண்டே ரெண்டு தோசைக்கு இவ்வளவு வேலை செஞ்சுட்டேன்.... முடியல..

# ஆமா, நான் படிக்கும்போது 12 கலர் பென்சில் தான இருந்துச்சு, எப்போ , எவன் 24 கலர் கண்டு பிடிச்சது...?????


நாளை குழந்தைகள் தினம் பாதி நாள் தான் பள்ளி என்று சந்தோசமாய்ச் சொன்னாள். குழந்தைகள் தினம் என்றால் என்ன என்று தெரியுமா எனக்கேட்டேன். நேரு மாமாவின் பிறந்த நாள் என்று சொல்லி அசரடித்தாள். அத்தோடு நிறுத்தியிருக்கலாம் என்னிடம் வழக்கம் போலவே கேள்வி கேட்டு வைத்தாள், ஏம்பா நேரு மாமாக்குக் குழந்தைகள்னா ரொம்பப் பிடிக்கும் அதனால அவர் பர்த் டே குழந்தைகள் தினமாக் கொண்டாடறோம், அப்படினா அப்துல் கலாம் சாருக்கும் குழந்தைகள் னா பிடிக்கும்ல, உங்களுக்கு, அப்புறம் நம்ம குழந்தைகள் கலைக் கொண்டாட்டத்துக்கு பொள்ளாச்சி இலக்கியவட்டத்துக்கு வந்த குமார்ஷா மாமா, ராம்ராஜ் மாமா, இனியன் மாமா எல்லாருக்கும் குழந்தைகள்னா ரொம்பப் பிடிக்கும்ல.. அவங்க பர்த்டேவ கொண்டாட மாட்டாங்களா...?

செம... இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் அளவுக்கு நான் வரலாறு படிக்கல , ஒரு சிரிப்பு சிரித்து வைத்தேன்.


பாரதியை ப்ரீ.கேஜி சேர்த்துவிட்ட புதிது, ஒரு நாள் வயிறு வலிக்கிறது என்று மிஸ்ஸிடம் போய் சொல்லியிருக்கிறாள். மிஸ் வயிறு வலிக்குது செல்போன் தாங்க எங்க அப்பாக்கு ஒரு போன் பண்ணிக்கறேன் என்று மிஸ் சிரித்துக் கொண்டே அப்பா உன்னை அழைத்துப்போக இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார் என்று சொல்லி இருக்கிறார். இவள், சரி போன் குடுங்க ஒரே ஒரு மெஸ்ஸேஜ் மட்டும் அனுப்பிக்கறேன் என்று சொல்லி இருக்கிறாள்.

போன பிறகு, மிஸ் இதைச் சொல்லிச் சொல்லி சிரித்தார்...






2 கருத்துகள்: