திங்கள், 25 ஆகஸ்ட், 2014

கவிதைகளால் இணைவோம் நிகழ்வு - 24.08.2014

கவிதைகளால் இணைவோம் நிகழ்வு - 24.08.2014


புதுக்கோட்டையில் வைகறை ஒருங்கிணைத்திருந்த கவிதைகளால் இணைவோம் நிகழ்ச்சிக்குப் புதுக்கோட்டை போயிருந்தோம் நேற்று.
சனிக்கிழமை இரவு பத்தரைக்கு சிங்காநல்லூர் பேருந்து நிலையம் வந்தேன் யாழி, அனாமிகா, சோழநிலா, யோகா அனைவரும் எனக்கு முன்பாக வந்து காத்திருந்தனர். பேருந்தேறிக் கிளம்பியவுடன் ஆரம்பித்த பேச்சு விடிய விடிய பேசிக்கொண்டேயும், அங்கங்கு பேருந்து நின்ற இடங்களில் தேநீர் அருந்திவிட்டும் அந்த இரவைக் கொண்டாடினோம்.

காலை ஐந்தரைக்குப் புதுக்கோட்டை. வைகறை வண்டியில் இரண்டு முறையாக எங்களை அழைத்துச் சென்று அவர் வீட்டில் தங்க வைத்தார் மணிக்கு. விடிய விடியத் தூங்கவில்லை எனவே 9 மணிவரை நன்றாகத் தூங்க வேண்டும்  என நானும் யாழியும் சொல்லிவிட்டுப் படுத்தோம். தூக்கம் வருவதற்குள் தனது மஞ்சள் நிற ஸ்மைலி பந்துடன் வந்து விட்டார் ஜெய்குட்டி.எங்கே தூங்குவது. அவருடன் விளையாட்டு பின்பு அவசரமாகக் குளித்து, ரோஸ்லின் சகோதரியின் சுவையான காலை உணவுடன் திருப்தியாகக் கிளம்பி அரங்கம் வந்தோம்.

பத்து மணியிலிருந்து ஒவ்வொருவராக வரத் துவங்கினர். நண்பர்கள் பிராங்க்ளின் குமார், நந்தன் ஸ்ரீதரன், நாணற்காடன், சுரேஷ் மான்யா,அனைவரையும் பார்க்கிறேன். நந்தன் பிராங்க்ளினின் காமிராவுக்கு செமத்தியாக வேலை வைத்தார். நிறைய புகைப்படங்கள் அதில் பிரேம் செட்செய்வது முதல் நிறைய சொல்லிச் சொல்லி தன்னையும் நண்பர்களையும் புகைப்படமெடுக்கச் செய்தார்.

நிகழ்வைத் துவங்கிவிடலாம் என வைகறை சொல்ல, கூட்டம் வந்துவிட்டதைக் கவனித்து விட்ட நாங்கள் எங்கள் இருக்கைகளிலமர்ந்து கொள்ள, வைகறை நிகழ்ச்சி பற்றி அறிமுக உரையோடு வரவேற்புரையாற்றினார்.

தொடர்ந்து கவிதை வாசிக்கும் நிகழ்வை என்னை ஒருங்கிணைக்கச் சொன்னார். நான் ஒருங்கிணைக்க, முப்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் என்னுடையதும் சேர்த்து வாசிக்கப்பட்டன.

கனிமொழி ஜி, கந்தகப்பூக்கள் பூபதி, செ.சுவாதி, அருணா சுந்தரராசன்,சிமிழி அடங்காதவன், நாகரீகக் கோமாளி, தேவதா தமிழ்,முகேஷ், தமிழ்வரதன் அனைவரையும் முதன் முறையாகப் பார்க்கிறேன். அவர்களின் கவிதை வாசிப்பையும்.

இது ஒரு அற்புத அனுபவமாகவே பட்டது.

ஒவ்வொரு கவிதைக்கும் சிலர் விமர்சனம் சொன்னார்கள், பெரும்பாலும் அவை வழமையான வார்த்தைகளாக இருக்க. ஒரு குறிப்பிட்ட கவிதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தோடு கவிதை முடிந்து விட்டது என்று நுணுக்கமாக கவனித்துச் சொன்ன நந்தன் மகிழ்ச்சியுறச் செய்தார். நான் கவிதை வாசிக்கும் போது மட்டும் அவர் புகைக்கவோ, ஜெய்குட்டியுடன் விளையாடவோ வெளியில் போகாமல் இருந்திருக்கலாம். கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி ஒவ்வொரு கவிதைக்கும் கருத்துச் சொன்னது அவரது கூட்டங்களில் அவரது அனுபவத்தைக் காட்டியது.

சுமன் என்றொரு பாடகர், தனக்கு பேச வராது என்று திக்கித் திக்கிப் பேசினார் ஆனால் ஒரு பாடலை அவர் பாடியபோது எங்குமே பிசிர் தட்டவோ திக்கவோ இல்லாமல் அழகான நீரோட்டமாக அமைந்தது பேராச்சர்யம். அவர் குரல் மயக்கி விட்டது அனைவரையும். இந்தக் குரலுக்குச் சற்று முன்புதான் நாணற்காடனைக் கவிதை வாசிக்க அழைத்த போது, கவிதைக்கு பதிலாக உருகி உருகி ஒரு பாடலைப் பாடி ஆச்சர்யமளித்தவர், சுமனின் பாடலைக் கேட்டுவிட்டு நீங்கள் எனக்கு முன் பாடியிருந்தால் நான் பாடியே இருக்க மாட்டேன் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டார்.

இலக்கியக் கூட்டங்களின் நடைமுறைச் சிக்கல்களும் நாமறிந்ததே. பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதால் இதில் உள்ள சாத்தியங்களையும், சங்கடங்களையும் ஓரளவு புரிந்து வைத்திருக்கிறேன்.


முகநூலில் நிறைய நல்ல எழுத்தாளர்கள், கவிஞர்கள் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் பலர் தங்கள் ஊரிலோ அல்லது பக்கத்திலோ நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கு ஒருமுறை கூடப் போவதில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. ஒருமாதம் வேலை அல்லது சூழ்நிலை காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு முறையுமா?

நிகழ்வின் பதிவுகளைப்பார்த்து விட்டு அடடா நேற்று நிகழ்ச்சி நடந்ததா. பக்கத்திலேயே இருக்கிறேன் தகவலில்லையா என்று பதறுபவர்களும், வரணும் வரணும் னு நினைப்பேன் ஆனா வர முடியல என வருந்துபவர்களும், எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள். இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே அலைபேசியில் அழைத்து பக்கத்து வீட்டில் கறிவிருந்து வர முடியவில்லை என்பவர்கள், நிகழ்சியின் நடுவில் வந்து அவசர அவசரமாக நோட்டில் வருகைப் பதிவைப் பதிந்து விட்டு உடனே கிளம்பிவிடுகிற பெருவியாதிக்காரர்கள், நிகழ்ச்சிக்கே வராமல் நிகழ்ச்சியைப் பற்றியும் நிகழ்ச்சியில் பேசியதைப் பற்றியும் விமர்சிப்பவர்கள், ஒரு துரும்பைக் கூட நகர்த்த உதவாமல் குறை கண்டுபிடித்துச் சொல்பவர்கள், என்ன உதவினாலும் கேளுங்க என்று சொல்லிவிட்டு காணாமலே போய்விடுபவர்கள், மைக் கையில் கிடைத்தவுடன் சுற்றம் , சூழல் அனைத்தையும் மறந்து விட்டு, மைக்கோடு சேர்த்து நேர நிர்வாகத்தைத் தின்று விடும் படியாகப் பேசிக் கொண்டே இருப்பவர்கள்...இப்படி எத்தனை விதங்களில் மனிதர்கள் இலக்கியக் கூட்டங்களில். யாரையும் குறை சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் ஒவ்வொன்றும் நமக்கு ஒவ்வொரு அனுபவம்.


உள்ளூர்க் கவிஞர்கள் நிறையப் பேரை எதிர்பார்த்திருந்த வைகறை சற்று சோர்வாகவே இருந்தார். கவிதைகள் குறித்து ரத்தினச் சுருக்கமாக நந்தன் பேசிய பேச்சை அனைவரும் ரசித்தனர். நன்றியுரை சோலச்சி சொல்ல நிகழ்வு முடிந்தது. பின்பு கிளிக் கிளிக் சப்தங்கள் முடிய மேலும் அரை மணி நேரம் ஆனது.

பழனியப்பா மெஸ்ஸில் நல்ல மதிய உணவை முடித்துக் கொண்டு கிளம்பினோம். வீடு வரும் போது நள்ளிரவு 12 நல்லவேளை திருச்சி வரை கனிமொழி ஜி தனது காரில் டிராப் செய்தார்கள். இல்லை எனில் விடிந்திருக்கும்...


நேற்றைய நாளை அர்த்தமாக்கிய வைகறை, யாழி, நந்தன், கனிமொழி ஜி, சோ.ரவீந்திரன் உட்பட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி....


6 கருத்துகள்:

  1. நன்று பூபாலன்.. நன்றியும்..

    - நந்தன் ஶ்ரீதரன்
    (அசிஸ்டண்ட் டைரக்டர் என்பது எனது பிளாக் பெயர்)

    பதிலளிநீக்கு
  2. நிகழ்வில் நடந்தவற்றை நிதானமாகத் திருப்பிப் பார்க்க வைத்த நண்பா அனைவரது ஒத்துழைப்பே சிறப்பாக்கியது நிகழ்வை!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்.
    உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
    நிகழ்வு பற்றி நானாவது சொல்லியிருக்கலாம்...புதுகையில் உள்ளவர்களிடம்....தகவல் கிடைக்காத காரணமே தவிர வேறொன்றுமில்லை தோழர்.ஆலங்குடியில் நடந்த முகநூல் நண்பர்கள் கூட்டத்தில் கூட்டம் கூடி அசத்தினர்....அடுத்த கூட்டத்தில் இப்படி நிகழாமல் பார்த்துக்கொள்கின்றோம்..நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நன்றி நந்தன், தேவதா தமிழ் , வைகறை, மது...

    பதிலளிநீக்கு