வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

ஒரு தலைவர் எழுத்தாளர் / வாசகராக இருந்தால்…

 

ஒரு தலைவர் எழுத்தாளர் / வாசகராக இருந்தால்

 



 ஓர் எழுத்தாளர் , புத்தகங்களை நேசிக்கும் வாசகர், தலைமையிடத்தில் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறேன்.. பள்ளிகளில், கல்லூரிகளில் பேசுவதற்குச் செல்லும் போதெல்லாம் ஓர் ஆசிரியர் வாசிப்பாளராக இருந்தால் அந்தக் கல்விக்கூடமும் மாணவர்களும் எவ்வளவு மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பார்க்கிறேன் அது குறித்துப் பேசியும் இருக்கிறேன். மருத்துவர்கள் வாசகர்களாக இருப்பதால் நிகழும் அதிசயங்களையும் பார்க்கிறேன்.. இப்படி, புத்தக வாசிப்பு என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாது அது புதிய சிந்தனைகளின் வாசலாக, புதிய புதிய கருத்துருவாக்கங்களின் வெளியாக மாறுகிறது என்பது தான் கண்கூடாகக் கண்ட உண்மை. நாம் கண்ட மகத்தான தலைவர்கள் எல்லோரும் சர்வ நிச்சயமாக புத்தக வாசிப்பாளராகத் தான் இருந்திருக்கிறார்கள். உலக அளவில் எடுத்துக்கொண்டாலும் இது தான் உண்மை.

 

கோவையில் ஆறாவது ஆண்டாக புத்தகக் கண்காட்சி சிறப்புற நடைபெற்றிருக்கிறது. அன்றாடம் சிறப்புரைகள், எல்லா அரங்குகளிலும் நூல் வெளியீடுகள், உரைகள், பட்டிமண்டபம், கலை நிகழ்ச்சிகள் என எல்லா புத்தகக் கண்காட்சிகளையும் போல ஆரவாரமான பத்து நாட்கள். எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்குமான திருவிழா.

 

கோவையில் இம்முறை ஒரு சிறப்பு. ஒரு நாள் முழுதும் தொழிலாளர்களின் கலை நிகழ்வுகள், விவாத அரங்கு, நாடகம், தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான போட்டிகள், பரிசளிப்புகள், நிறுவனங்களில் சிறந்த வாசகருக்கான விருதுகள் என தொழிலாளர்களுக்கான திருவிழாவாகவும் இந்தப் புத்தகத் திருவிழா மாறியிருக்கிறது.. இதற்கெல்லாம் காரணமாக ஒரு மூளையின் சிந்தனை மிளிர்கிறது. அது சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களது மூளை.

 

நான் கோவையில் உள்ள ரூட்ஸ் நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். நான் பணிபுரியும் நிறுவனத்தில் மனிதவளத்துறையின் இயக்குநராக இருப்பவர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன். நாடறிந்த பேச்சாளர், தன்னம்பிக்கை எழுத்தாளர். தற்போது கோவை புத்தகக் கண்காட்சியின் ஆலோசனைக் குழுவில் இருப்பவர். அவரது ஆலோசனையின்படியும் வழிகாட்டுதலின் படியும் தொழிலாளர்களுக்கான இத்துணை சிறப்பான நிகழ்வுகளும் ஒரு நாள் முழுவதும் நடந்தது. வாசிப்பின் மகத்துவத்தை உணர்ந்த ஓர் ஆளுமையால் தான் இப்படியான தொலைநோக்கு சிந்தனையைக் கொண்டுவர முடியும்.

 

இதுமட்டுமல்லாது, எங்கள் நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் இருந்தும் பல தொழிலாளர்களை அரைநாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பில் புத்தகக் கண்காட்சிக்கு நிறுவனத்தின் பேருந்தில் அழைத்து வந்து புத்தகங்களைப் புரட்டிப்பார்த்து வாங்க, வாசிக்க ஒரு நல்வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். மேலும் இந்த யோசனைகளின் சிகரமாக, விருப்பபடும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூபாய் 500 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். அவர்கள் அதே தொகைக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் சம்பளத்தில் ரூபாய் 250 மட்டுமே பிடித்தம் செய்யப்படும். மீதி 250 ரூபாயை நிறுவனமே செலுத்தும். இந்தத் திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் புத்தகங்களை வாங்கினர்; அதில் பலர் முதன்முறையாக புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள். முதன்முறையாக புத்தகத்தை வாங்குபவர்கள். வாசிப்பைப் பரவலாக்க, இதைவிடவும் வேறு என்ன திட்டத்தைச் செய்துவிட முடியும்? இவர் இவ்வளவும் செய்வதற்கும் இன்னும் இன்னும் பல புதிய திட்டங்களைச் செயல்படுத்தவும் எங்கள் நிறுவனத்தின் தலைவர் மேன்மைமிகு திரு.ராமசாமி ஐயா எப்போதும் மனமுவந்து வாழ்த்தி வரவேற்பார். மேலும் சமுதாயத்துக்கும், இயற்கைக்கும் எப்போதும் பயன்படும்படி நம் ஒவ்வொரு அடியும் இருக்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோளும் கூட.

 

இது ஒரு வாசகனாக, புத்தகங்களின் காதலனாக, எழுத்தாளனாக நான் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு நன்றி செலுத்தும் பதிவு..

 

அன்பின் நன்றி.. வாசிப்பின் வாசல்களைத் தொழிலாளர்களுக்கும் திறந்துவிட்டமைக்கு

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக