செவ்வாய், 31 ஜூலை, 2018

சிற்பி இலக்கிய விருது 2018

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் பொள்ளாச்சியில் கவிஞர் சிற்பி அவர்களது அறக்கட்டளையின் பெயரில் சிற்பி இலக்கிய விருது விழா நடைபெறும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி சனிக்கிழமை, பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில் நடைபெறுகிறது..

இந்த முறை விருது பெறுபவர்கள் என் மதிப்பிற்கும் அன்புக்கும் உரியவர்கள், தொடர்ந்து நான் அவர்களது படைப்புகளையும் செயல்பாடுகளையும் விரும்பி கவனித்து வருகிறேன். நான் மட்டுமல்ல, தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் அத்துணை பேருக்கும் தெரிந்த முகங்கள்.

இந்த ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருது பெறுபவர்  கவிஞர் மகுடேஸ்வரன் அவர்கள். மிகச் சிறந்த கவிஞர்,  எழுத்தாளர், பேச்சாளர், அற்புதமான தமிழ் அறிஞர்,ஆய்வாளர்,ஆர்வலர், பல்வேறு புதிய தமிழ்ச்சொற்களையும் , மொழிபெயர்ப்புச் சொற்களையும் தமிழுக்கு தொடர்ந்து வழங்கி வருபவர். 

கவிஞர் மகுடேஸ்வரனை நான் எனது கல்லூரிக் காலத்திலிருந்து வாசித்து வருகிறேன். எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தனது கற்றதும் பெற்றதும் பகுதியில் மகுடேஸ்வரனின் பல்வேறு கவிதைகளையும் குறுங்கவிதைகளையும் அறிமுகம் செய்துள்ளார்.

வாழ்ந்து கெட்டவனின் 
பரம்பரை வீட்டை 
விலை முடிக்கும்போது 
உற்றுக் கேள் 
கொல்லையில் 
சன்னமாக எழும் 
பெண்களின் விசும்பலை

கவிஞர் மகுடேஸ்வரனின் இந்தக் கவிதையை பல நிகழ்வுகளில், மேடைகளில் நான் சொல்லி வந்திருக்கிறேன்.

 ஆட்டுக்குட்டிகள்
 முதுகு தேய்த்துரச உதவட்டும்
 என் கல்லறைச் சுவர்

- இதுவும் அவர் கவிதை தான். எப்போதும் நினைவில் இருக்கும் கவிதை. என்னை அடீங்கோ, கொல்லுங்கோ எனத்துவங்கும் ஒரு கிராமத்துப் பெண்ணின் குரலில் ஒலிக்கும் கவிதையும், அந்தக்காலம் போலில்லை இந்தக்காலம் என்கிற அவரது கவிதையும் எப்போதும் நினைவில் ஊறிக்கொண்டேயிருக்கக் கூடிய கவிதைகள்.


பல்வேறு கவிதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகளுக்குச் சொந்தக்காரர். தனித் தமிழ் எழுத்தும் பேச்சும் இவரது சிறப்பு. கவிஞர் மகுடேஸ்வரன் பெறும் விருது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது

வாழ்க நீங்களும் தங்களது தமிழ்ப்பணியும் அண்ணா ...

மேலும் கவிஞர் மகுடேஸ்வரனுடன் இந்த ஆண்டு சிற்பி அறக்கட்டளையின்  பி.எம்.எஸ் விருது மணல் வீடு ஆசிரியர் மு.ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மு.ஹரிகிருஷ்ணன் தவசி கருப்புசாமி என்ற பெயரில் கவிதைகளை எழுதி வருகிறார். மணல்வீடு என்ற சிற்றிதழை கடின உழைப்போடும் அர்ப்பணிப்போடும் தொடர்ந்து மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாது  நாட்டுப்புறக் கூத்து, மரப்பாவை, தோற்பாவைக் கூத்து முதலிய கூத்துக்கலையையும் நாடகக் கலையையும் ஆவணப்படுத்தியும் அழிந்துவிடாமல் காக்கவும் களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் என்ற அமைப்பைத் துவங்கி ,  தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்.மணல் வீடு இலக்கிய வட்டம் மூலமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இலக்கிய விருதுகளும் வழங்கி வருகிறார்.

மணல் வீடு பதிப்பகம் மூலம் நவீன இலக்கியத்தின் முக்கியமான புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பவர் என பல்வேறு முகம் கொண்ட ஆளுமை.  ஹரிகிருஷ்ணனுக்கான விருதும் மிகப் பொருத்தமானது.

வாழ்த்துகள் மு.ஹரிகிருஷ்ணன்.


எழுத்தாளர் நாஞ்சில்நாடன் வாழ்த்துரை வழங்க தமிழறிஞர் கரு.ஆறுமுகத் தமிழன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.. விருது விழா, தமிழ்த் திருவிழாவாக இருக்கப் போகிறது ..

நிகழ்வின் அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன் .. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வருக..



4 கருத்துகள்:

  1. சார் கவிஞர் மகுடேஸ்வரின் கவிதைகள் இரண்டும் மிக அருமை ..தங்களின் வாசிப்பு தன்மை அற்புதம்...வாழ்த்துக்கள் இரா.பூபாலன் சார்

    பதிலளிநீக்கு