ஞாயிறு, 28 மே, 2017

மீன்கள் பறக்கும் வானம்

மீன்கள் பறக்கும் வானம்

- ந.பெரியசாமியின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் கவிதைத் தொகுப்பை முன்வைத்து

( நான்காவது கோணம் - ஏப்ரல் மாத இதழில் வெளியானது )




கவிதை மனநிலையின் மைய இழைகளை எப்போதும் சில கண்ணிகள் இணைத்தபடியே இருக்கும். அந்தக் கண்ணிகளின் வடிவங்கள் ஒவ்வொரு காலத்திலும் மாறிக்கொண்டே இருப்பன. நம் காலத்தில் அது ஒரு குழந்தையாகவும் நிற்கிறது.

பொதுவாகவே நாம் நம் குழந்தைகளைக் குழந்தைகளாகவே பார்ப்பதில்லை. நம் கனவுகளின் ஒட்டுமொத்த உருவமாக, நமது எதிர்காலத்துக்கான முதலீடாக, உற்பத்திக்காரர்களாக, நமது கட்டளைகளுக்குக் கீழ் படிந்து நடக்கும் நம் சேவகர்களாக, பிராய்லர் கோழிகளாக என பல்வேறு வடிவங்களில் அவர்களைக் காணுகிறோம்.

கவிஞர் ந.பெரியசாமியின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் கவிதைத் தொகுப்பு குழந்தைகளைக் குழந்தைகளாகக் கண்ட கவிதைகள். குழந்தைகளின் அழகியல் தருணங்களைப் பதிவு செய்த கவிதைகள் நிறைந்த ஒரு தொகுப்பு.

குழந்தைகளையும் அவர்களின் குழந்தைமையையும் இழக்கத் துவங்கும் பருவம் ஒன்றுண்டு. அது அவர்கள் பள்ளிக்குச் செல்லும் பருவம். அரசுப்பள்ளிகளில் கூட பெரிய ஆபத்தில்லை. அங்கெல்லாம் இன்னும் ஓட்டாங்கரம் , கபடி, கோ கோ, நொண்டி என இணைந்து விளையாடுகிறார்கள். காக்காக் கடி கடித்து ஒரே மாங்காயைப் பகிர்ந்துண்ணுகிறார்கள்.. ஆனால் இந்தத் தனியார் பள்ளி மாணவர்கள் அவ்வளவு பாவப்பட்டவர்கள். ஆண்டொன்று ஆவதற்குள் அவர்களுக்கான கட்டுப்பாடுகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

பள்ளி வளாகத்துக்குள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும், தின்பண்டங்களையும் உணவையும் யாரிடமும் பகிராமல் கீழே மேலே சிந்தாமல் உண்ண வேண்டும், விளையாட்டெல்லாம் வாரத்துக்கு ஒரு நாள் ஒரு மணி நேரம் அதுவும் கணினி முன் அல்லது அறைச்சுவர்களுக்குள் என படிப்படியாக சிறகுகளைக் கத்தரித்து நடக்கவும் ஓடவும் மட்டுமே பழக்கத் தொடங்கிவிடுகிறார்கள் பறக்கத் தெரிந்த பறவைகளை.

இப்படி பிராய்லர் கோழிகளாக, பலன்களுக்காக மட்டுமே லாப நோக்கில் வளர்த்தப்படும் குழந்தைகள் தங்களது குறும்புகளை, விளையாட்டுகளை, குழந்தைத் தருணங்களை என யாவற்றையும் இழந்து விடுவதில் என்ன பிழை நேரப்போகிறது.


பள்ளிக்கூடம்

அடிக்கடி நீரிலிட்டு
புதிது புதிதாக சோப்பு வாங்க
பூனை மீது பழி போடுவாள்

விருந்தினரின் செருப்புகளை ஒளித்து
புறப்படுகையில் பரபரப்பூட்டி
நாயின் மீது சாட்டிடுவாள்

தேவைகளை வாங்கிக் கொள்ள
உறுதியளித்த பின் தந்திடுவாள்
தலையணை கிழித்து மறைத்த
ரிமோட்,வண்டி சாவிகளை

கொஞ்ச நாட்களாக 
குறும்புகள் ஏதுமற்றிருந்தாள்

மாதம் ஒன்றுதான் ஆகியிருந்தது
அவளை பள்ளிக்கு அனுப்பி

பள்ளிக்கூடங்கள் அப்பட்டமான வதைக்கூடங்களாகிவிட்டன என்பதற்கான நிகழ்கால சாட்சியாய் நிற்கிறதிந்தக் கவிதை.

குழந்தைகள் தங்கள் ஓவியங்களின் மூலம் உயிர்களைப் பிறப்பிக்கிறார்கள், இயற்கையை சிருஷ்டிக்கிறார்கள். அது கோணல் மாணலாக இருந்தாலும் ஒரு அழகுடன் இருக்கிறது. ஒரு வரையறுக்கப்பட்ட ஒழுங்குடன் அந்த ஓவியம் இருப்பதில்லை ஆகவே அது எக்காலத்துக்குமான நவீன ஓவியமாகிறது.அதன் புள்ளிகளில் , கோடுகளில், கிறுக்கல்களில் உயிர்ப்பானது ஓவியம் மட்டுமல்ல இந்தக் கவிதையும் கூட


அருவி

இறுக மூடினான்
முன்பின் கதவுகளை
திரைச்சீலைகளால் மறைத்தான்
ஜன்னல்களை
துவட்டிக்கொள்ளவென
துண்டுகளைக் கொடுத்தான்
அவனது அடுத்த கோமாளித்தனமென
பரிகசித்துக் கொண்டிருக்கையில்
சாரலில் நனையத் துவங்கினோம்

சித்திரத்தில் பிறப்பித்திருந்தான்
அருவியை 


இவரது கவிதைகளில் இருப்பதெல்லாம் குழந்தைத் தருணங்கள் தாம். அவை தரும் அனுபவங்கள் அந்தத்தக் கணத்துக்கான கொண்டாட்டங்கள். குழந்தைகள் நமது வானின் நட்சத்திரங்கள். நமது வானத்தை ஒளியூட்டி வருபவர்கள். அவர்களல்லாது நாம் ஒரு வானம் என்று யார் அடையாளப்படுத்துவது ? சொல்லப்போனால் அவர்களால் தான் நாம் வானமாக இருக்கிறோம் .

நட்சத்திரம்

நுழைந்ததும்
காத்திருந்தார் போல் இழுத்தான்
அறையுள் கலர்
கலராக நட்சத்திரங்கள்
அறிமுகப்படுத்துவதாக
நீண்ட பெயர்ப்பட்டியலை வாசித்தான்
வானில் இருத்தல் தானே 
அழகென்றேன்
எங்க டீச்சர் சொல்லிட்டாங்க
அதெல்லாம் கோள்களாம்
அப்போது பூமியிலிருந்து
ஒரு நட்சத்திரம்
வானுக்குத் தெரிகிறது

குழந்தைகளைக் கடவுளாக்கிக் கவிதையாக்குவது தொன்று தொட்டு நாம் செய்வது தான். அப்படியான கவிதைகளிலெல்லாம் குழந்தைகளின் சிறு செயல்களெல்லாம் வரங்களாக்கி படைப்புகளாக்கப்படும். ந.பெரியசாமியும் அதைச் செய்திருக்கிறார். கொஞ்சம் தனித்த தன்முத்திரையுடன்


எளியவர் என் கடவுள்

ஈரமாக்கியது நீதான்
குற்றச்சாட்டோடு எழுவார்

சமாதானம் கொள்வார்
எட்டணா சாக்லேட்டுக்கும்
மெனக்கிடாத பொய்களுக்கும்

சிறு அறைதான்
சிங்கம் உலாவ 
பெரும் வனமாகவும்
மீனாக துள்ளிட ஆறாகவும்

பூங்காக்களில் சறுக்கும் 
பலகை போதும்
புன்னகை சிறகு விரிக்க

வடை தூக்கும் 
காக்கைக் கதையில்
உறக்கம் கொள்ளும்
என் கடவுள் எளியவர்

நெற்றியில் பூசும் திருநீறுக்கே
மலையேற்றம் கொள்ளும்
என் குடிசாமி போல

கடைசி வரிகள் இதை ஒரு குழந்தைக் கவிதை என்று மட்டும் அடையாளப்படுத்தாமல் எளிய மனிதர்களின் வாழ்வியலை, அவர்களது எளிய கடவுளின் வழியாகச் சொல்கிறது.


குழந்தைக் கவிதைகளின் தொகுப்பென்ற வகையில் இது வழக்கமான தொகுப்பு தான். ஆனால் இந்தக் கவிதைத் தொகுப்பின் கவிதைகள் வழக்கமான கவிதைகள் அல்ல. இது நவீன பிள்ளைத் தமிழ். இவை குழந்தைகளை அறிவுறுத்தாத அச்சுறுத்தாத மொழியில் பேசுகிறது. மேலும், குழந்தைகளுக்கு மாறுவேடம் எல்லாம் போடாமலும், அவர்களைக் கடவுளாக்காமலும் இயல்பான குழந்தைமையைக் கவிதையாக்கியிருக்கிறார்.

இது முழுக்க முழுக்க குழந்தைகளின் உலகம் ; நாம் குழந்தைகளைக் கொண்டாட வேண்டும், இந்தக் கவிதைகளையும்


ஆசிரியர் :  ந.பெரியசாமி
வெளியீடு : தக்கை , 15, திரு.வி.க சாலை, அம்மாப்பேட்டை, சேலம் 3
தொடர்புக்கு : 9487646819

நன்றி : நான்காவது கோணம் மாத இதழ் , கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக