செவ்வாய், 20 டிசம்பர், 2016

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையில் நூல் அறிமுகம்

கடந்த 17.12.2016 அன்று தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையில் எனது ஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதை நூல் அறிமுகம் செய்யப்பட்டது.



மாலை 4.30க்கு நிகழ்வு எனச் சொல்லி இருந்தார்கள். பகல் பன்னிரண்டுமணிக்குக் கிளம்பினோம். நான், அதிரூபன்,சோலைமாயவன், மற்றும் தம்பி சரவணன். செல்லும் வழியில் வத்தலகுண்டு சென்று ஜெயதேவன் அய்யா அவர்களைச் சந்தித்து ஐந்து நிமிடம் பேசிவிட்டுக் கிளம்பினோம். இருப்பினும் குறித்த நேரத்துக்கு நிகழ்வுக்கு ஆஜர்.

இலக்கிய நிகழ்வுகளுக்கே உரிய எழுதப்படாத விதியாக நிகழ்வு ஆரம்பிக்கும் போது ஆறு மணிக்கும் மேல் ஆகிவிட்டது ( ஆள் வந்தால் தானே ஆரம்பிக்க முடியும் ).

நிறைய நேரம் இருந்ததால் நண்பர்களுடன் பேச முடிந்தது.. பிறகு இப்படி வகை வகையாக புகைப்படங்கள் எடுக்கவும் முடிந்தது













மூன்று புத்தகங்கள் அறிமுகம், ஒவ்வொரு புத்தகத்தையும் இருவர் அறிமுகம் செய்வது மற்றும் ஒரு சிறப்புரை , ஒரு தலைமையுரை என தோழர் விசாகன் கன கச்சிதமாகத் திட்டமிட்டிருந்தார்.

தோழர் சிவசங்கர் அவர்களுடைய கடந்தைக் கூடும் கேயாஸ் தியரியும் சிறுகதை நூல், நாகராஜ் அவர்களுடைய தென்றலதிகாரம் கவிதை நூலுடன் எனது நூலும் அறிமுகம் செய்யப்பட்டது.

எனது கவிதைத் தொகுப்பை இளங்குமரன் அவர்கள் அறிமுகம் செய்துவைத்துப் பேசினார். முதன் முறையாக அவரைச் சந்திக்கிறேன். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கும் முன்பாகவே அவருடைய கூட்டுத் தொகுப்பு ஒன்றுக்கு கவிதை அனுப்பியிருக்கிறேன். அவர் எனது முகவரியை குறுஞ்செய்தி வழி கேட்டிருக்கிறார். நான் கவனக்குறைவாலும் மறதியாலும் அனுப்பாமல் விட்டிருக்கிறேன். அதைக் குறிப்பிட்டு அந்த நூலை அப்போது எனக்கு மேடையிலேயே பரிசளித்தார்.

எனது கவிதைகளைக் குறிப்பிட்டு எளிய , அழகான அறிமுகத்தை இளங்குமரன் அவர்கள் நிகழ்த்தினார். ஏற்புரையில் வழக்கம் போலவே சுமாராகப் பேசினேன். முதல் தொகுப்புக்காரர்களான இளையவர்களை ஒவ்வொரு கூட்டத்திலும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் எனவும்விசாகன் அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்தேன்.
( பின்னணி யாதெனில், பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் எட்டு நூல்களையும் அறிமுகம் செய்வதாக சொல்லியிருந்தார், நானும் நூல் ஆசிரியர்களிடம் சொல்லி வைத்திருந்தேன். அது தவறிவிட்டது.. அதே தான் )

என்னுடைய தொகுப்பை அறிமுகம் செய்திருக்க வேண்டிய இன்னொருவர் மணிமொழி அவர்கள் வரவில்லை என விசாகன் அவர்கள் தகவல் தெரிவித்தார். அது தானே நமது அதிர்ஷ்டம் எப்போதும்...


நறுமுகை தேவி அவர்கள் வழக்கம் போல தனது கறார் பேச்சால் கவிதைத் தொகுப்பை அறிமுகம் செய்தார். அவருடைய கோணத்தில் விமர்சனமாக அமைந்தது அவரது உரை.


 நாகராஜ் அவர்களின் கவிதை நூலை அறிமுகம் செய்த இன்னொரு பேச்சாளர் எழுத்தாளர் திரு.எஸ்.செந்தில்குமார் அவர்கள். மிகவும் தண்மையாகப் பேசினார். டால்ஸ்டாய் குழந்தைகளைப் பற்றி எதுவுமே எழுதவில்லை எனத் துவங்கியவர். டால்ஸ்டாயின் வாழ்க்கையப் பற்றி சிறப்பான உரையொன்றைக் கொடுத்தார். அவரது பேச்சு மிக அனுக்கமாக இருந்தது.
ஒரே குறை, தனது வகுப்புத் தோழர், கவிஞர் நாகராஜ் அவர்களின் கவிதை நூல் அறிமுகம் செய்ய வந்தவர் அதைப்பற்றி, அவரது கவிதைகளைப் பற்றி அதிகம் பேசவில்லை. அது தான் அவசியம் என நினைக்கிறேன்.


கடந்தைக்கூடும் கேயாஸ் தியரியும் நூலை இருவர் அறிமுகம் செய்தனர் மிக எளிய பேச்சில், தனது அனுபவத்தினூடாகவும் வாசிப்பினூடாகவும் அந்தச் சிறுகதைத் தொகுப்புக்கு அழகான உரையை கண்மணிராசா வழங்கினார். அவரது பேச்சு சிறப்பாக அமைந்தது. ரேவதி முகில் அவர்களும் தனது கோணத்தில் கதைகளை அறிமுகம் செய்து வைத்துப்பேசினார். ஒரு கதையை அவர் அழகாக அறிமுகம் செய்துவைத்துப் பேசப் பேச , இன்னும் வாசிக்காமல் வைத்திருக்கும் அந்தத் தொகுப்பின் மீதான ஈர்ப்பு கூடியது.






ஏற்புரையில் சிவசங்கர் தனது பரந்துபட்ட பன்மொழி வாசிப்பைச் சொன்னபோது ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் இருந்தது, ஒரு நல்வாசகன் நல்ல எழுத்தாளனாவதில் ஆச்சர்யப்பட எதுவுமே இல்லை தான்.

கடைசியாகப் பேச வந்த திரு.பொன்முடி அவர்கள் நாக்ராஜ் அவர்களின் கவிதைகளை சிலாகித்தும், கூட்டத்தை சிலாகித்தும் ஒரு நீண்ண்ட உரையை வழங்கினார். அருமையான பேச்சு. ஆனாலும் நேரம் ..??

நிகழ்வில் படைப்பாளர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு விசாகன் வியப்பான ஏற்பாடொன்றைச் செய்திருந்தார். அது ரோஜா மாலை. ஆளுயர ரோஜா மாலை போட அரசியல் கூட்டமா இது. உங்கள் அன்பும் அன்பளிப்பாக சில புத்தகங்களும் போதுமே தோழர். 

இலக்கியக் கூட்டங்களில் பொன்னாடை, மாலை, துதி, காலில் கபக்கென விழுதல் போன்ற அசம்பாவிதங்களை மனம் ஏற்கவே மறுக்கிறது.



கிளம்பும் போதே ஒருவரை சந்திக்கத் திட்டமிட்டிருந்தேன், வீட்டுக்கே சென்று சந்திக்க தயாராக வந்திருந்தேன். அது இயலாமல் போனது. ஆனாலும் அவசர வேலைகளுக்கிடையிலும் அன்புடன் நிகழ்வுக்கு வந்து தனது கவிதை நூலைத் தந்துவிட்டு ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு, கொஞ்ச நேரம் உடன் அமர்ந்து நிகழ்ச்சியை கவனித்துவிட்டு என மகிழ்ச்சியைத் தூவிச் சென்றார் எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன். அவருக்கு என் அன்பு...


கவிஞர் ஸ்ரீதர் பாரதி அவர்களும் வந்திருந்தார். அவரை நீண்ட நாட்களுக்குப்பின் சந்தித்ததில் மகிழ்ச்சி.

நிகழ்வு முடிய முடியக் கிளம்பி இரவு இரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் .. மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை... பொள்ளாச்சி இலக்கிய வட்டம் இருக்கிறது. நிறைய வேலைகள் இருக்கின்றன நேரமே கிளம்பவேண்டும், அதற்கு நேரமே எழ வேண்டும்.... கொர்ர்

( இருந்த , நல்ல புகைப்படங்களைப் பதிவிட்டிருக்கிறேன் )

8 கருத்துகள்: