வியாழன், 25 டிசம்பர், 2014

மின்சாரம் அது மின்சாரம் ...

மேட்டுப்பாளையம் - கோவை சாலையில் குருடம்பாளையம் ஊராட்சியில் மட்டும் மின்னுகிறது சூரியசக்தி மின் விளக்கு.

மகிழ்ச்சியாக இருக்கிறது, பெருகி வரும் மின் தேவையிலும், குறைவாக இருக்கும் ( குறையாகவும்) மின் உற்பத்தியிலும் மாற்று எரிசக்தி என்று சொல்லப்படுகிற Renewable Energy Sources ல் மிக முக்கியமான சூரிய ஒளியைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் அத்தியாவசியமானது. சூரிய ஒளி தீர்ந்துவிடவா போகிறது..?

குருடம்பாளையம் ஊராட்சி இந்த விஷயத்தில் கோவைக்கு முன்னுதாரணம். மற்ற எல்லா தெரு விளக்குகளும், நெடுஞ்சாலை விளக்குகளும் சூரிய சக்தியில் இயங்க ஆரம்பித்தால் எத்தனை சிறப்பாக இருக்கும்.? மின்சக்தி நிறைய சேமிப்பாகும், பராமரிப்பு செலவொன்றும் பெரிய அளவில் இருக்காது. மின்கலன்களை மட்டும் முறையாகப் பராமரித்தால் போதும்.

சில நாட்கள் முன்பு டெல்லியிலிருந்து அலுவல் நிமித்தம் வாடிக்கையாளர் ஒருவர் வந்திருந்தார். அவருடன் பேசியது சுவாரஸ்யம். காரில் போகும் போது இந்த சூரிய சக்தி மின்விளக்கைக் காட்டிப்பேசும் போது அவர் சொன்ன சம்பவம் அதிர்ச்சியடைய வைத்தது.

அவர் ஊரில் கோடைக்காலம் கொடுமையாக இருக்குமாம், கிட்டத்தட்ட 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை போகுமாம். அப்படி வெயிலின் உக்கிரம் தீவிரத்தைக் காட்டும்போது ட்ரான்ஸ்ஃபார்மர்கள் செயலிழந்து விடுகின்றன. எனவே மின் வினியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இது பலநாட்கள் தொடரும் என்கிறார்.

ஒரு முறை பத்து நாட்களாக அவ்வூரில் மின் வினியோகம் தடை செய்யப்பட்டதால், பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளாத நிலையில் மக்கள் கொதித்துப் போய் மின்சார வாரியத்தை முற்றுகையிட்டிருக்கிறார்கள்.. கிட்டத்தட்ட 500 பேருக்கும் மேல் கூடிவிட்டார்கள் என்றார். மின்வாரிய உயரதிகாரிகள் வந்து விசயத்தை விசாரித்தார்களாம்.

முழு விபரத்தையும் பொறுமையாகக் கேட்ட அதிகாரிகள் சரி, நீங்கள் இந்த முறையீட்டை அப்படியே எழுத்தில் எழுதிக் கொடுங்கள் மேலும் அந்த முறையீட்டுடன் நீங்கள் கடைசியாகக் கட்டிய மின்கட்டண ரசீதையும் இணையுங்கள் நீங்கள் மின்வாரியத்துக்கு பணம் செலுத்துகிறீர்கள் உங்கள் குறைகளைக் களைய வேண்டியது எங்கள் கடமை என்று சொல்லி இருக்கிறார்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அங்கு ஒரு ஆள் கூட இல்லையாம்.

இங்குதான் நிறுத்தினார். வியப்பாக ஏன் என்றேன்.

அந்த ஊர் நல்லவங்க மின்கட்டணம் கட்டி பல வருடங்கள் ஆகின்றனவாம், மின் கட்டணம், அபராதம் எல்லாம் சேர்த்தால் ஆளுக்கு பல லட்சங்கள் கணக்கு வருமாம்.

அதிர்ந்து விட்டேன். அவர் சொன்ன தொனியைக் கேட்டதும் அப்படி சிரிப்பு வந்து விட்டது. பின்பு கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது.

அவரது இந்தத் தகவல் அதிர்ச்சியாக இருந்தாலும், அவருக்கு நம்மவர்கள் தந்தது இன்னும் சிறப்பு. கோவை அழகான ஊர், மக்கள் பண்பானவர்கள் என்றெல்லாம் சொன்னார். தமிழ் தனக்குப் பிடித்த மொழி என்று அவர் சொன்ன போது பெருமையாக இருந்தது. தமிழில் சில வார்த்தைகள் தெரியுமென்றும் சொன்னார். என்னென்ன வார்த்தைகள் தெரியுமெனக் கேட்டேன். வணக்கம், சாப்பிடுங்க என்று மெளன ராகம் சர்தார்ஜி போல சொன்னார். ரேவதியைப்போல யாரோ சொல்லிக் கொடுத்திருக்ககூடும். மேலும் அவர் சொன்ன வார்த்தையில் தான் அதிர்ந்து விட்டேன். தமிழில் நான் வெறுக்கும் மிக மோசமான கெட்ட வார்த்தையைச் சொன்னார். அதிர்ச்சியுடன் இது மிகக் கேவலமான வார்த்தை யார் சொல்லித்தந்தது எனக் கேட்டேன். சென்னையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் சொல்லிக் கொடுத்ததாம். அந்த ஓட்டுநர் யாரோ குறுக்கே வந்த போது நடந்த சண்டையில் திட்டினாராம் இந்த வார்த்தையில். இவர் இது என்ன வார்த்தை , பணம் பாக்கி தர வேண்டிய இவருக்குக் கீழே இருக்கும் விற்பனையாளர்களைத் திட்ட இந்த வார்த்தையை உபயோகித்துக் கொள்ளலாம் என்று ஓட்டுநரிடம் கேட்டதற்கு விரிவாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

தயவுசெய்து இந்த வார்த்தையை உபயோகிக்காதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டு அவரை வழியனுப்பி வைத்தேன்.


இவருடன் ஒரு மூன்றுநட்சத்திர உணவகத்துக்கு உணவருந்தச் சென்றிருந்தேன். அன்றைக்கு இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பெண்கள் அங்கு உணவருந்த வந்திருந்தார்கள். உணவுக்குப்பின் நம்மாட்கள் வெளியில் புகைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த வெளிநாட்டுப் பெண்கள் இவர்களை விட நீளமான வெண்குழல்வர்த்தியை எடுத்துப் புகைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நம்மாட்கள், என்ன கலாச்சாரம் இது பெண்களும் புகைக்கிறார்கள் என்று புகைந்தார்கள். கொஞ்ச நேரத்தில் அவர்கள் புகைத்து முடித்த மிச்சத் துண்டை எங்கு வீசுவது எனத் தேடிக்கொண்டிருந்தார்கள். காரணம் அங்கு குப்பைத் தொட்டியே இல்லை. நம்மாட்களோ காலுக்கடியில் போட்டு ஏற்கெனவே நசுக்கியிருந்தார்கள். வாயிற்காப்பாளர் ஓடி வந்து இங்கேயே ஓரமாகப் போட்டுவிடுங்கள் சுத்தம் செய்பவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று சொல்லியும் கேட்கவில்லை, அவர்கள் கேட்டும் கொடுக்கவில்லை. எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மீண்டும் நெடுந்தூரம் உள்ளே நடந்து உணவறைக்கு வெளியே இருந்த குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டே வந்தார்கள். நம்மவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

# கெட்டதுலயும் நல்லது இருந்தா கத்துக்க வேண்டியதுதானே ..? நல்லதைமட்டும் ….


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக