திங்கள், 15 செப்டம்பர், 2014

தமிழில் எழுதுபவனுக்கு ஆங்கிலத்தில் ஒரு விருது .. Best Author Award 2014



தமிழில் எழுதுபவனுக்கு ஆங்கிலத்தில் ஒரு விருது


கொஞ்ச நாட்கள் முன்பு உடுமலையிலிருந்து Youths Club India என்ற அமைப்பிலிருந்து அழைத்தார்கள். அவர்களின் ஆண்டு விழாவில் சிறந்த தொழிலதிபர், சமூக சேவகர், என்று பத்து விருதுகள் தருவதாகவும் அந்த வரிசையில் சிறந்த எழுத்தாளர் விருதுக்கு என்னைப் பரிந்துரைக்கப் போவதாகச் சொன்னார்கள். திடுக்கிட்டுவிட்டேன். நான் அப்படியெல்லாம் எதுவும் பெரியதாக எழுதவில்லையே என்ற போது எனது கவிதைகள், வலைப்பூ, முகநூலைப் பார்த்திருப்பதாகவும் எனது கவிதைத் தொகுப்பைப் படித்திருப்பதாகவும் சொல்லி எனது சுயவிவரக் குறிப்பைக் கேட்டார்கள். நான் இன்னும் பெரிதாக எதுவும் எழுதவில்லை வேண்டுமானால் இந்த விருதுக்கு நான் நன்றாக எழுதிக் கொண்டிருக்கக் கூடிய நல்ல எழுத்தாளர்களைப் பரிந்துரைக்கிறேன் என்றேன். அதையும் செய்யுங்கள் மேலும் உங்கள் சுயவிவரக் குறிப்பையும் கொடுங்கள் என்றார்கள்.

ஒரு வாரம் கழித்து நான் கையில் கொங்குப் பகுதியைச் சேர்ந்த எட்டுப்
பேருடைய பட்டியலுடன் அவர்களுக்கு அழைத்தேன். அப்போது தான் தங்களது இரண்டு விதிமுறைகளைச் சொன்னார்கள் ஒன்று எழுத்தாளர்கள் 34 வயதுக்குள் இருக்கவேண்டும் என்றார்கள் முதல் விதிமுறையிலேயே ஏழு பேர் அவுட். மீதமிருந்த ஒருத்தரும் அடுத்த விதிமுறையில் கழிந்தார் அது உடுமலை அல்லது பொள்ளாச்சிக்காரராக இருக்க வேண்டும்….. முடியவில்லை. விடாப்பிடியாக எனது சுய விவரத்தை மட்டும் வாங்கிக் கொண்டார்.

பிறகொரு நாள் பேசும் போது 32 பேர் தேர்வுப் பட்டியலில் இருப்பதாகச் சொன்னார் 32 பேரா..? நம்பிக்கையோ எதிர்பார்ப்போ இல்லாமல் தான் இருந்தேன். ஆனாலும் ஆச்சர்யம் , இரண்டு நாட்களில் ஒரு குறுஞ்செய்தியில் அறிவுப்பு நீங்கள்தான் தேர்வாகியிருக்கிறீர்கள் என்றும் செப்டம்பர் 14 அன்று விழா என்றும். அந்தக் குறுஞ்செய்தி வந்த அன்று தான் புதுக்கோட்டைப் பயணம். பயணத்தில் யாழி தனது நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் தருகிறார். வாழ்த்துரை இரா.பூபாலன் என்று இருந்த வரிகள் அத்தனை ஆனந்தத்தையும் அதிர்ச்சியையும் ஒருங்கே தந்தது. காரணம் நூல் வெளியீட்டு விழா செப்டம்பர் 14 என்னைக் கேட்காமலே என் பெயரைப் போட்டுக் கொள்ளாலாம் என்ற நம்பிக்கை யாழிக்கு வந்ததற்கு என் அன்பு தான் காரணமாயிருக்கும். யாழியின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாய் நானிருக்கிறேன் என்பதே மகிழ்ச்சி. எப்படிக் கலந்து கொள்வது என்று மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தேன்.யாழியிடமும் லேசாகச் சொல்லி வைத்தேன்.

நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னாள் நிகழ்ச்சி நிரல் தந்தார்கள் விருது விழாவுடன் கண்தானம், ரத்த தானம் என்று பல நிகழ்ச்சிகளுடன் முழுநாள் நிகழ்வாக இருந்தது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. யாழி நூல் வெளியீட்டு விழா காலை பத்து முதல் ஒரு மணி வரை . உடனே அலைபேசியில் அவர்களிடம் கேட்டேன் சரியாக விருது விழா எப்போது என்று. 3.30க்கு என்று சொன்னதும் மிக்க மகிழ்ச்சி. காலையில் நூல்வெளியீட்டு விழா , அடித்துப் பிடித்துப் போனால் போய் விடலாம்.

செப்டம்பர் 14 அன்று காலை 9.30க்கு அர்த்ரா அரங்கில் ஆஜர். ஆனால் விழா துவங்க 11 ஆகி விட்டது. முன் அனுமதி வாங்கிக் கொஞ்சம் முன்னதாகவே பேசிவிட்டுக் கிளம்பி கொஞ்சம் தாமதமாக விருது விழாவுக்கு 4 மணிக்குப் போய்ச் சேர்ந்தேன்.

மனம் உறுத்தலாகவே இருந்தது. எந்த நிகழ்ச்சியிலும் இப்படி இடையில் அவசரமாகச் செல்லும் பழக்கம் இருந்தது இல்லை. அத்தனை பெரிய மனிதனும் இல்லை. நிறைய நண்பர்கள் வந்திருந்தார்கள் தூரத்திலிருந்தும். அவர்களுடன் கதைத்திருக்கலாம் தான்… உறுத்தலாக இருந்ததால் யாழி, இளஞ்சேரல், இளவேனில், வைகறை என அனைவருக்கும் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி விட்டேன் மன்னிக்கும் படி.


விருதுக்கு வருவோம், தாமதமாகப் போனதால் விருது தாமதமாகி அங்கேயே இரவு ஏழு ஆகி விட்ட்து. இருப்பினும் அங்கும் முகநூல் நட்பான பரிசல்காரன், ஆர்த்தி மங்களா சுப்ரமணியன் ஆகியோரைச் சந்தித்தது மகிழ்ச்சி.


ஆர்த்தி, பல திறமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள பெண், எழுதுகிறார், பாடுகிறார், இசையமைக்கிறார், இயக்குகிறார் எல்லாம் சேர்த்துக் குறும்படமாக்குகிறார் அதைவிடவும் சிறப்பு அவர் ஒரு தேர்ந்த MAGICIAN. மேடையிலேயே சில தந்திரக் காட்சிகளைச் செய்து கைதட்டல்களை அள்ளினார். இன்னும் உயரங்கள் காத்திருக்கிறது தோழி.

சொன்னது போல, தமிழில் கவிதைகள் எழுதிக் கொண்டிருப்பவனுக்கு Best Author என்று ஆங்கிலத்தில் விருது கொடுத்தார்கள். உள்ளூரில் வேறெந்தக் கெட்ட விஷயங்களுக்கும் போகாத ஒரு இளைஞன் உருப்படியாக ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறான் அல்லது எழுத முயற்சிக்கிறான் என்று அவதானித்து இந்த விருதைக் கொடுத்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.






Youth’s Club Indiaவிற்கு நன்றி. பிரபு, கதிரவன், மணிகண்டன் போன்ற இளைஞர்கள் இவ்வமைப்பை உருவாக்கி மிகச் சிறந்த சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த இளைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் பகிர்கிறேன்.


இனியேனும் எழுத வேண்டும் நல்லபடியாக …


இந்த விருதைச் சாத்தியமாக்கிய பொள்ளாச்சி இலக்கிய வட்டச் செயல்பாடுகள், கருந்துளை சிற்றிதழ் மற்றும் என் கவிதைகளை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன் …

5 கருத்துகள்: